வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

கொங்கைகள் வேண்டும்


வானம்
கறுப்புக் குடை பிடித்திருக்க
இரவெல்லாம்
கொட்டிய மழையில்
மண் சுவருக்கு வெளியே
முளைத்திருந்த
குட்டைக் காளான்கள்
நான்காவது
கண்டிப்பாக
ஆண்தான்
அசலூர் ஜோசியக்காரன்
அடித்துச் சொன்னபிறகும்
இரட்டையாய் பிறந்திருந்த
தங்கச்சிப் பாப்பாக்களின்
விரல்களை போலவே
மெத்தென்றிருந்தன

நேற்று வரையிலும்
நெஞ்சுக்கு ஏறிய
வயிற்றுப் பாரத்தோடு
முதுகு நிமிராது
பனிக்குடம்
உடையும் வரை
பீடிசுற்றி,
பெற்றுப் போட்ட
ரெண்டும் பெட்டை
என்றதும்
ஜன்னி கண்டு
விழுந்தாள்.
பீடி சுற்றும் பெண் 

உள்ளுர் மருத்துவச்சி
கைவிரித்த பிறகும்
கையில் காசில்லை
என்று
காணாமல் போய்விட்டான்
மலையாண்டி
பெரண்டை ஊறிய
கள் தலைக்கேறியதும்
மூதேவி
ரெண்டு மூதேவிகளை
பெத்துப் போட்டுட்டா
சாமியாடி
சாமியாடி 
மலையேறிய அப்பனின்
கண்ணைக் குத்தச் சொல்லி
எசக்கி அம்மனிடம்
வேண்டிக் கொண்ட
பேச்சிக்கு
ஈரக்காளான்
ஸ்பரிசம்
தங்கச்சிப் பாப்பாக்களை
கண்ணுக்குள் கொண்டுவர
நாடா இல்லாத
முக்கால் பாவாடையை
இடுப்பில் இறுக முடிந்து
ஒரே பாய்ச்சலில்
குடிசையில் நின்றாள்

கோணிப் பாயில்
விறைத்துப் போய்க்
கிடந்த செல்லாயி
ஒன்ன நிர்க்கதியாக்கிட்டுப்
போய்ட்டாளே
மாரில் அடித்துக்கொண்ட
பெண்கள்

வைசூரி கண்டு
மருந்தில்லாமல்
தங்கை மாரி
சாமியிடம் சென்றபோது
செல்லாயி அழுதது
ஏனோ நினைவுக்கு
வந்தது பேச்சிக்கு

பறச்சேரி சுடுகாட்டில்
செல்லாயி புதையுண்ட பிறகும்
புழுதி மண்ணை
தலையிலிறைத்து
ஒப்பாரி வைத்த
மலையாண்டி
மீண்டும் மீண்டும்
சாமியாடி
மலையேறினான்.
ஈரமான
துணித் தொட்டிலில்
வீரிட்ட
தங்கச்சிப் பாப்பாக்களுக்கு
யார் பால் கொடுப்பார்கள்?

குழந்தைகள்
தாமாகவே
சாமியிடம் செல்லும்வரை
உயிரோடு
விட்டிருக்கிறார்கள்
என்று
எட்டு வயது
பேச்சியின்
புத்திக்கு எட்டவில்லை

மாராப்புக்குள்
மாரியை
சாய்த்துக்கொண்டு
பேச்சியின்
தலைகோதும்
செல்லாயி
மறுபடி
பிறக்கமாட்டாளோ
இசக்கி அம்மா
எனக்காவது
கொங்கைகளைக்
கொடு தாயே!
பேதலித்துப் புலம்பினாள்
பேச்சி.


எழுதியவர்: ஜெயஷாந்தி

2 கருத்துகள்: