செவ்வாய், 13 நவம்பர், 2012

தந்தி தொலைக் காட்சியில் நெகிழ்ச்சியான தீபாவளி நிகழ்ச்சி !

தந்தி தொலைக் காட்சியில் நெகிழ்ச்சியான 

தீபாவளி நிகழ்ச்சி !

உள்ளத்தை கொள்ளை கொண்ட 360 உலகைச் சுற்றி !

                ஒளியின் திருநாள் என்று கொண்டாடப் படும் தீபாவளியில் மத்தாப்புக்களும் வாண  வேடிக்கைகளும் நான் சிரித்தால் தீபாவளி என்று வர்ண ஜாலம் காட்ட சுவாசத்தை இழுத்துப் பிடிக்கும் புகை மண்டலத்துக்குப் பயந்து தொலைக் காட்சியில் கண் பதித்துக் கிடந்த போது  சிந்தனைக்கு விருந்து வைத்தது புதிதாகத் தொடங்கப் பட்டிருக்கும் தந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று .மாலை ஐந்தரை மணி முதல் 6 மணி வரை ஒளி பரப்பு செய்யப் பட்ட  360 உலகைச் சுற்றி என்ற நிகழ்ச்சி இன்றைய தீபாவளியின் விஷேசம் என்று சொல்லலாம் .பல்வேறு தொலைக் காட்சிகளிலும்  ஓடாத அல்லது தியேட்டரை விட்டு ஓடிய திரைப்படங்கள் , நடிக நடிகையர் பேட்டிகள் என்று ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு நடுவே  புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்த இந்த நிகழ்ச்சி புதிய தகவல்கள் வியக்கச் செய்த சுவாரஸ்யங்கள் கலந்த கதம்பமாக நெஞ்சில் கலந்தது .

 
             உலகத்தின் பல்வேறு பகுதியிலும் கொண்டாடப் படும் வெவ்வேறு ஒளியின் திருநாள்கள் (festivals  of lights )தகவல்களை ^வரலாற்றுப் பின்னணியுடன் பாரம்பரியக் கதைகளும் சேர்த்து வழங்கினார்கள் . அறிவும் செல்வமும் பெருக , வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் மலர ,உற்சாகமாகஉலகெங்கும் சிறப்பிக்கப் படும் விதவிதமான ஒளியின்  திருநாள்கள் பற்றி விவரித்த போது  காட்சியும் கருத்தும் கண்களையும் சிந்தையினையும் சேர்த்துக் கவர்ந்தன ! மகுடத்தோடு மன்னனின் தலையினையும் உருட்டி விட நடந்த அரசியல் சதி முறியடிக்கப் பட்ட  நான்கு நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்தை ஒளியின் நாளாகக் கொண்டாடும் இங்கிலாந்தின் பழமை போற்றும் பாரம்பரியம் இன்றைக்கு கொண்டாடப் படும் கோலாகலம் கண் முன் கொண்டு வரப்பட்டது .ஆவிகளை விரட்டுவதற்காக பேய் நெருப்பினைப் பற்ற வைத்து ஜப்பானில் நடத்தப் படும் தீப்பந்தத் திருவிழாவின் மரபினையும் ரொம்ப சுவாரசியமாகக் காட்சிகளோடு விவரித்தார்கள் .பேய் ,ஆவி என்ற நம்முடைய நாட்டுப்புற நம்பிக்கைகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இந்தத் தகவல் உதவியாக இருக்கலாம் .

  ஈரானில் பேசப்படும் எலாமைட்டு என்ற மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாகவும் இந்தியாவின் வட   பகுதியிலிருந்து ஈரானுக்கு இடம் பெயர்ந்து சென்ற தொல் திராவிடர்களின் கலப்பே இதற்குக் காரணம் என்றும் மொழியியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள் .ஈரானில்   பழங்குடி சமூகத்தினரின் மார்ச் மாதத்தில் தொடங்கும் புது வருட விழா கொண்டாட்டத்தில் போகிப் பண்டிகை போல நெருப்பைக் கொளுத்தி இருளையும் குளிரையும்  விரட்டி அடிக்கும் ஒளிக்கு மரியாதை செலுத்துவதாக 360 உலகைச்சுற்றி நிகழ்ச்சியில் வண்ணப் படக் காட்சிகளுடன்  விளக்கினார்கள் கலாச்சாரப் பரிமாற்றங்களும் பண்பாட்டுப் பரி வர்த்தனைகளும் மொழிக் கலப்புடன் நடந்துள்ளன என்பது நமக்குப் புரிந்தது.

        நம்முடைய அறுவடைத் திருநாளான பொங்கல் பெருநாளில் சூரியனுக்கு நன்றி செலுத்துவது நமது மரபு. ஜப்பானில்  கொண்டாடப்படும் கோஷோ ஹட்சு என்ற அறுவடைத் திருநாளும் தமிழர் மரபினை ஒட்டியே சிறப்பிக்கப் படுகின்ற பண்டிகை .இது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும் . ஆனால் நம்முடைய மாட்டுப் பொங்கல் போல தாம் வளர்க்கும் மாடுகளுக்கான திருநாளாக தென்கொரியத் தீவு ஒன்றில் பழைய புல்லை எரித்து மாடுகளுக்கு புதிய புல்  வேண்டி நடைபெறும் ஒளித்திருநாள் பற்றிய செய்தியினை தந்தி தொலைக் காட்சியின் 360 உலகைச்சுற்றி நிகழ்ச்சி மூலம் அறிந்து  கொள்ள முடிந்தது .


 இன்னொரு முக்கியமான தகவல் Hanukkah என்ற யூதர்களின் ஒளித்திருநாள் பற்றியதுதான் .ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன்பு  கட்டப் பட்ட எருசலேம் தேவாலயத்தினை ஆக்கிரமித்திருந்த கிரேக்கர்களைத் தோற்கடித்து துரத்திய பிறகு அத்  தேவாலயத்தை கடவுளுக்கு மீண்டும் அர்ப்பணம் செய்திட்ட யூதர்கள் எட்டு நாள்கள் எண்ணெய் விளக்குகள்  ஏற்றிக் கொண்டாடும்  சரித்திரத்தினை அதன் பாரம்பரியத்துடன் அதோடு சேர்ந்து வழங்கும் வாய் மொழிக் கதைகளுடன் இணைத்து சொன்னது சுவையாக இருந்தது . ஒரே ஒரு நாளுக்கான எண்ணெய்  மட்டுமே இருக்க  எட்டு நாள்கள் விளக்கு அணையாமல் சுடர் விட்டு எறிந்ததாகச்  சொல்லப் படும் அந்த இரண்டாம் நூற்றாண்டுக் கதை  இருக்கின்ற இயற்கை வளங்களை மற்றவர்களிடமிருந்து சுரண்டாமல் பங்கிட்டு பகிர்ந்து வாழலாம் என்ற  பாடத்தை அல்லவா நமக்குத் தருகிறது !

இறுதியில் நமது தீபாவளி செய்திகளைக் கண் கவர் விதத்தில் வழங்கினார்கள் பொன்னும் பொருளும் அருளும் திருமகள் இல்லங்களில் எழுந்தருள்வதற்காக ஏற்றப்படும் மண் விளக்குகள் பற்றிக் கூறினார்கள் ஆனால் சந்தையில் மண் விளக்குகள் விற்பனை சரிந்து சீன விளக்குகள் மவுசு பெற்றிருப்பதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன திருமகள் வீற்றிருக்கும் செந்தாமரை மலர்களையும் காணவில்லை அவை மலர்ந்திருக்கும் நீர் நிலைகளையும் காணவில்லை . இப்படி இயற்கையினை மொட்டை அடித்தது போலவே நம் முன்னோர்கள் இயற்கையிலிருந்து உருவாக்கிய  பொருள்களையும் பரணில் போட்டு விட்டோம் அத்துடன் நமது பாரம்பரியத்தையும் சேர்த்தே  தலை முழுகி முகவரி இழந்து நிற்கிறோம் .அதன் ஒரு அடையாளம்தான் மண் விளக்குகளின் இடத்தை சீன விளக்குகள் பிடித்துக் கொண்டதும் ! waste  management  என்ற பெரிய பெரிய வார்த்தைகளை இன்று பயன் படுத்திக் கொண்டிருக்கிறோம் ஆனால் நம்முடைய பாட்டிமார்கள் தயாரித்த விளக்குமார்களில்  கூட அந்த waste  management  னைக் காண முடிந்தது . பனை ஓலையிலிருந்து அற்புதமாக உருவாக்கப் பட்ட வண்ணச் சீர்ப் பெட்டிகளும் தென்னை  ஓலையிலிருந்து  உருவாக்கிய  விளக்குமார்களும் பிளாஸ்டிக் வரவால் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன .
 
       உலகெங்கும் கொண்டாடப்படும் ஒளியின் திருநாள் பற்றி தந்தி தொலைக் காட்சியின் 360 உலகைச் சுற்றி நிகழ்ச்சி அவ்  விழாக்கள் பொதுவாக சூரியனுக்கு மக்கள் நன்றி சொல்கின்ற நாள் என்பதனைத் தெளிவாகச் சொன்னது . அந்த ஆதவன் மார்பிலேயே பெரிய ஓட்டை போட்டு விட்டு  ஒளியின் நாளைக் கொண்டாடும் நாம் நம் பழம்  கலாச்சாரம் பாரம்பரியம் இயற்கையுடன் ஒட்டிய வாழ்வு இவற்றை உலக நாடுகள் பலவற்றின் பாரம்பரியங்களோடு நினைவு கூறும்  வகையில் ஒளிபரப்பான 360 உலகைச் சுற்றி நிகழ்ச்சியில்  சொலப்பட்டவற்றைத் தாண்டி நம்மை சிந்திக்க வைத்தது சிறப்பு அம்சமாகும் . ஆங்கிலச் சொற்கள் தேவைக்கு ஏற்ப பயன் படுத்தப் பட்டிருந்ததாலும் பன்னாட்டு சம்பவங்களின் தொகுப்பில் தவிர்க்க முடியாது என்பதாலும்  சுருங்கச் சொல்லி விளங்க வைத்த மொழி நடையும் காட்சித் தொகுப்பும்  பாராட்டுக்குரியவை .Media  என்பது அறிவுறுத்துவது தகவல் தருவது பொழுது போக்கிற்குரியது என்பதைக் கடந்து நின்ற  தந்தி தொலைக் காட்சியின் 360 உலகைச் சுற்றி தீபாவளி நிகழ்ச்சி அற்புதம்