புதன், 7 டிசம்பர், 2011

கையற்ற காதல்


என் காதலுக்குக்
கண் இருந்தது
கைதான் இல்லை !
யாருக்குப் புரிகிறதோ
இல்லையோ
உனக்குப் புரியும் .
ஆகாயம் தொட்ட
பசுமையை
அண்ணாந்து அதிசயித்த வேளை
நீ என்றும்
என் நெஞ்சில்
பசும் பூ என்றாய் .
கொடைக்கானல் மலைக்காற்றில்
உன் நெருக்கத்தின் வாசம் .
மறைத்து வைத்த
மகிழம் பூவாய்!

ஒன்றரைக் கையுடன்
குழந்தை என்றதும்
முடத்தைப் பெற்ற
மூடக் கழுதை
வசவுகளில் வறுபட்டதில்
எனைத் தொலைவில்
வைத்து விட்டாள் தாயும் !
நீயோ தூக்கி வைத்துக்
கொண்டாடினாய் !
வீட்டு விசேஷம்
ஊர் விழாக்கள்
ஒதுக்கப்பட்டு மறக்கப்பட்டேன்
பிறகு நானே
புறக்கணித்தேன்
புறக்கடையில் நின்று
கொண்டு !

நீயோ
உன் வாழ்வின்
ஒரே விசேஷம்
நான் என்றாய்
தேரில் ஏறி வரும்
திருநாள் அம்மனாய்
அவதரித்தேன்
உன் வார்த்தைகளில்


வார இறுதியில்
மதுரையிலிருந்து
கொடைக்கானலுக்குப்
பேருந்து வருகிறதோ
இல்லையோ
நீ வந்தாய்
எனக்காகவே !
அனுதாபமா என்றேன்
அன்பு என்றாய்

கல்லூரியில் சொல்லாத
உலக வரலாறுகளை
நீ எனக்கென்றே
விவரித்த போது
ஆங்கில ஆசிரியை
வரலாற்று மாணவியாய்
மாறிய மாயம்
உன்னோடு நானும்
இரசித்தேன் .
இலக்கியமும் வரலாறும்
பிரிக்க இயலாதவை
உன்னையும் என்னையும் போல
என்றாய்
கண்ணோடு கண் நோக்கி
நீ பேசிய காவியத்தை
உயிரில் எழுதிக் காத்தேன்

எனக்குப் பிடித்த
சொடக்குத் தக்காளி
கை நிறையத் தந்து
காதல், வார்த்தைகளில்
இல்லை ,
காட்டும் அக்கறையில்
என்ற போது
ஆயிரம் சூரியன்களாய்
நீ அருகிருக்க
ஆலங்கட்டி
மழை கொட்டியது
நெஞ்சுக்குள்.
பரணில்
வீசப்பட்ட
பழைய பொருளாய்
கிடந்தேன்
நீ
என்
நினைவுகளை
சுவாசிப்பதாய்
சொன்னபோது
பொதிகையின்
புதிய
தென்றலாய்
புலர்ந்தேன்

என் 
கண்கள் 
மின்னலின் 
பனிப் பொழிவு 
என்றாய் 
என் 
மொழி
கலைகளின் அபிநயம் 
என்றாய் 

தேரிக் காட்டுச் 
செம்மண்ணில் 
படர்ந்திருக்கும் 
செண்டுப்பூ 
நான் என்றாய் 
செவ்வரளி 
இதழ் 
சேவல் கொண்டைச் 
சிவப்பில் 
என்
பட்டுப் பாதங்கள் 
என்றாய் 
ஆவாரம் பூவையும் 
அந்திச் சூரியனையும் 
குழைத்து தீட்டிய 
முகம் 
என்றாய் !

புத்தகங்களில் 
மூழ்கிக் கிடந்தவனை 
கவிதை முத்தெடுக்கச்
செய்த 
என் மகாராணி 
நீ 
என்று 
மலைகளின் இளவரசி 
சாட்சியாய் 
சொன்ன 
அந்தக் கணத்தில் 
என் 
ஒன்றரை கை 
காணாமலே 
போய் விட்டது .

கிளியோபட்ரா
சின்ட்ரெல்லா 
எல்லாமே நானோ 
இறுமாந்து கேட்டேன் 
நான் 
தேவதையா ?
இல்லை 
தேவதைகளின் 
தேவதை என்றாய் .

உன் 
அறிவின் விசாலம் 
நகம் தீண்டாத 
நாகரீகம் 
பாலையில் 
புதிய மழையாய் 
உன் அன்பு 
நீயே 
நானாய் 
நினைவுகளில் 
கலந்து கரைந்தேன் 

என் வீட்டார் 
நம்பவேயில்லை 
இந்த ஊனத்தையும் 
நேசிக்க ஒருவன் 
என்பதை 
பிறந்த நாள் முதல்
பார்த்திராத 
நாணத்தை 
பெண்மையின் 
நெகிழ்வைக் 
கண்களில் கண்டதும் ,
ஒரே முடிவாய்
வந்தார்கள் உன்னிடம்
திருமணத் தேதி குறிக்க!


பாவம் எனப் பரிவு
காட்டியது பாவமா ?
தன்னம்பிக்கை தர
நட்பு பாராட்டியதற்குத்
தண்டனையா?
பரிகாசச் சொற்களில்
நீ 
அள்ளி வீசிய 
அமிலத்தில் 
அவர்கள் 
துடித்துப் போனார்கள் 
நானோ 
மரித்தே போனேன்!


நட்புக்கும்
காதலுக்கும் 
வித்தியாசம் 
தெரியாதா 
என்று 
முகத்தில் அறைந்தாயாம் 
ஏன் தெரியாது ? 
உதடுகளோடு 
சேர்ந்து சிரித்த 
கண்களின் 
கயமைதான் 
தெரியாமல் 
போய் விட்டது 

ஆனால்
உனக்கு
நான் கண்டிப்பாக
நன்றி சொல்ல வேண்டும்
கண்ணீரில் கலைந்த
என்
கையறு நிலைப்
பாடல்களும்
எனை எள்ளி
நகையாட
இருட்டில்
நான் நத்தையாய்
என் முடத்தொடு
முடங்கிப் போன போது
வீழ்த்திய காதலின்
கட்டுக்கள் கத்தரித்து
துக்க முக்காடு களைந்து
எனை எழச்செய்தது
உன்
வரலாற்றுக் கதைகள்தான் !

உயர வைத்து
உயர்ந்த
பெண்களின்
சரித்திரம்
நீ
முறித்துப் போட்ட
என்
கனவுகளுக்குப்
பதியம் போட்டன .
என் தாய் கூட 
அஞ்சினாள்
நான் 
தற்கொலை 
செய்து கொள்வேன் என்று 
நானோ 
உன் 
வஞ்சனையில் செத்து 
மீண்டும் பிறந்தேன் 
மலைக் குறிஞ்சியாக 


எழுதியவர்:  ஜெயசாந்தி

ஞாயிறு, 27 நவம்பர், 2011

நதியின் தாகம்





உச்சத்தில் பிறப்பு
மலை மகள்
கர்ப்பக்கிரகத்திலிருந்து
மண் மாதா மடியில்
பாயும் பரவசம்.
கல்லோடும் முள்ளோடும்
இழைந்து சென்றாலும்
பூக்களையும் போர்த்திப்
புன்னகைப்பவள் நான் .


பொதிகையின் பரணி
தரணியின் தாகம்
தீர்க்க வந்த தாமிரபரணி
தமிழின் தீர்த்தம்
கழனிகளில் கலந்தோடி
கதிர்களோடு உறவாடி
கிராமத்துக் காற்றில்
கலைகளை சுவாசித்து
களைப்பின்றிப் பயணம்.


ஆலமரங்கள் சூழ்ந்திருக்கும்
முத்தாலன்குறிச்சி
பள்ளிக்குழந்தைகள்
பூவரசம் பூக்களை
வியந்தபடி
வேப்பமர நிழலில்
உரக்கச் சொல்லும்
ஓரிரண்டு ரெண்டு
வாய்ப்பாட்டில்
ஊர்க்கணக்கும்
விளங்கியது
இங்கு
மனிதர்களும் மரங்களும்
சம அளவில் சமமாக
கூடவே உறவு கொண்டாடும்
கிளிகளும் குருவிகளும்!




மருதாணிக் கைகளில்
மஞ்சள் மணமணக்க
மாரியம்மா நீராடுகையில்
குப்பென்று கிளம்பும்
அவித்த நெல் வாசம்.
தாவணிப் பருவங்களின்
கெண்டைக் கால்களை
கெண்டை மீன்கள்
கவ்வும் காதலில்
கலந்து வரும்
கொலுசு சப்தம்
என் உயிர் சுண்டும்
சங்கீதம்!


தூக்கு நிறைய
செக்கெண்ணெய்
கொண்டு வரும்
மணக்கரை செட்டியார்
மாலைப் பதநீர்
குடித்த கலயத்தின்
பனை வாசம்
பனங்காட்டு விடுலிக்குள்
காய்ச்சப்படும் கருப்பட்டிப்
பாகின் சுகந்தம்




ஆலமரக் கிளைகள் தோறும்
கொத்துக் கொத்தாய்க்
கனல்  துண்டுகள்!
கொத்தும் கிளிகளோடு
குலவும் காக்கை குருவிகள்
காக்கா முள்ளில்
காத்தாடி செய்து
காற்றுக்கு
எதிர்த் திசையில்
ஓடி வரும்
குழந்தைகளின் கூச்சல்


என்னில் குளிர்ந்து
வைகறை சூரியனில்
காய்ந்து
பைக்கட்டில் பதுக்கிய
நயினார் தோட்டத்து
புளியம் பழங்களோடு
பள்ளிக்குச் செல்லும்
பிள்ளைகள்
மதியமும் மாலையும்
குருத்து மண்ணை
அளைந்தபடி பேசும்
கதைகளில்
எனக்குப்
புரிந்து போகும்
பூகோள சரித்திரம்




தைப் பொங்கல்
திருநாளில்
தாய் வீட்டுச்
சீர் சுமந்த
பனை ஓலை
வண்ணப் பெட்டியில்
சர்க்கரைப் பொங்கல்
கரும்போடு
அவித்த பனங்கிழங்கும்
ஆற்று மணலில்
ஊர் கூடி உண்கையில்
பகிர்ந்து கொள்ளும்
பாசத்தின் பசுமையில்
கனவுகளின் வண்ணங்களில் 
பண்பாடும் இயற்கையும்
இணைந்து
கை கொட்டும்


இப்போதோ
இவையெல்லாமே
வறண்டு போன
நிகழ் காலத்தின்
கடந்த கால
ஈர நினைவுகள் .
பிழைப்பு தேடி
என் கரை கடந்து
பெயர்ந்து சென்ற
உறவுகளின் கண்ணீரில்
உப்புக் கரிக்கிறேன்


ஓங்கி அடிக்கும்
வேஷ்டியில்
புருஷனையும் சேர்த்துத்
துவைக்கும்
பெண்களின்
ஆரவார ரகசியங்களும்
கருக்கலில்
பேய் உலவுவதாய்
புரளி கிளப்பி விட்டு
ஏகாந்த நிசப்தத்தில்
நீரில் தெரியும்
நிலவு சாட்சியாய்
காதலியர் காதில்
காளையர் கிசுகிசுக்கும்
கதைகளும்
மலங்காட்டு விருவை
சுட்டுத் தின்ற பின்
விடிய விடிய
வேட்டை சாகசங்கள்
பேசும் பெருசுகளின்
வீர மொழிகளும்
இப்போது
எதுவுமே இல்லை .



கோடையில்
நான் இளைத்துப்
போகையில்
ஊற்று தோண்டி
தேங்காய் சிரட்டையில்
மொண்டு
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததாம்
பாடி வந்து
அன்னை எனக்கே
அமுது ஊற்றிய
பிள்ளைகளின்
குலை குலையாய்
முந்திரிக்கா குதூகலமும்
எதுவுமே இல்லை .


எப்போதும் லாரி
நிற்கிறது ,
மணல்
மாயமாகிறது
பனைகளின்
சமாதியில் 
செங்கல் சூளைகள் !
குருவிகளின்
நெல்கொறிப்பும்
ஆலமரக் கிளிகளின்
ஆசை மொழிகளும்
அற்றுப் போயின !





பாறைகளும் ,
பாய் தொழில்
முடங்கியதால்
கேட்பாரற்றுப் போன
கோரைகளும் மட்டுமே
என்னோடு!
என் மக்கள்
என் மரங்கள்
என் சொந்தங்கள்
யார் தருவார்கள்
மீட்டு ?
தவிப்பில் நிலைக்கும்
தாகம்
யார் தீர்ப்பார் ? 








எழுதியவர்: ஜெயஷாந்தி

சனி, 29 அக்டோபர், 2011

கர்வத்தின் கடவுள்

ஒரு சூரியோதயத்தின்
முதல் கீற்று
பூமியை முத்தமிட்ட
பொற்கணத்தில்
கதிரைக் கையில்
கொண்டு வந்த
குண்டு குழந்தை
நான்
கர்வத்தில் குழைத்து
வார்த்த கடவுள்
சித்திரம்
நான்.
செத்துப் பிறக்கும் எனும்
மருத்துவரின் ஆருடத்தை
மரிக்கச் செய்து
நீலம் பாய்ந்து
நிலம் பார்த்து
பதியம் போட்டுக்கொண்ட
பச்சிலைக் கொடி
நான்

அம்மாவின் சேலை பற்றி
பற்றுக்கோடு இதுவென்று
அலைந்து
பிறகு
நிலை கலைந்த பிள்ளை.

பள்ளிக்கு செல்லாமல்
வாத்தியார் அப்பாவின்
பிரம்பை ஏய்த்து
கன்னத்து சுருக்கங்களில்
கனிவை தேக்கியிருந்த
பாட்டியின்
சொரசொரப்பு விரல் பற்றி
 தேரிக்காட்டு செம்மண்ணில்
பனங்காற்றை பருகிய
அறியா பருவத்தில்
கட்டிவைக்க முடியாத
சில் வண்டாய் கர்வம்.

தவழ்ந்து மோதுகையில்
நடைவண்டி பழகுகையில்
நிலைதடுமாறி தலை கவிழ்ந்த
மூச்சடைத்த தருணங்களில்
ஐம்பொறிகளையும் காய்ச்சல்
அடித்துபோட்ட வலிகளில்
அம்மாவாய் பாட்டியாய்
மூன்றாவதாயும் யாரோ
உடனிருந்த கர்வம்

கடவுள் என்று பேரிட்டு
கண்ணில் காட்டாமல்
பெற்றோரும் பெரியோரும்
சொல்லி வைத்த கதைகள்
நடுமண்டையில்
அறிவு வார்த்தையாய்
அடைபட்டதேயன்றி
வார்த்தை ஊற்றுக்கண்ணாய்
உணரப்பட்டதேயில்லை

ஐந்தாம் வகுப்பில்
மார்கரெட் டீச்சர்
கணக்கு நோட்டில்
ஒன்றுக்கு பின்னே
இரண்டு சைபர் போட்டு
கன்னத்தில் தட்டி
சக மாணவியர்
கை தட்டியபோது
இரண்டு சைபர் மட்டுமே
நான்
என்றறியாத கர்வம்.


பாடம், படிப்பு
கலை, கவிதை, கட்டுரை
முதலிட வேகம்
விஷமாய் இறங்கி
பரிசுகளாய்
கைகளை நிறைத்தபோது
வாங்கிய கைகள் கூட
என் படைப்பு இல்லை
என்று
தெரிந்துகொள்ளாத கர்வம்.

அன்பு
அது என் அப்பா!
கதைகள் சொன்ன
கண்டிப்பா? கனிவா?
புதிரிலேயே உலகத்தை புரியவைத்த
அறிவின் உச்சம்
கால நதி
அவரை
மறுகரைக்கு மாற்றிய பின்னும்
கண்ணீரில் கரையாமல்
மிச்சமிருந்த கர்வம்.

கவலைகளுக்கே கல்லறை கட்டி
வசந்தத்தில் எங்களை
உயிர்ப்பித்த அம்மா
அது என் அம்மா!
ஆதி நதியின்
துளியே அவள் என
விளங்காத கர்வம்.

பயண சுழற்சியில்
ஆற்று சுழியாய் சிக்கல்கள்
பிரளயத்தில் பாதை
வாழ்க்கை திசைகளை
இழந்துவிட்டதாய்
திக்கற்று நின்றபோது
விரல் நுனியில் என்
ஆதி சூரியன்
விழித்துணராத
தகதகத்த வெளிச்சம்
விழுங்காத கர்வம்.

ஐம்பொறிகளிலும் ஆணிகள்
சுளுவாக எடுத்திட
தோழன் அருகிருந்தும்
நானே பிடுங்கி எறிவேன்
என்று
உயிரை கிழித்துக்கொண்ட கர்வம்.

கூடவே வந்த நடை
தொடர்ந்த குரல்
துரத்தி வந்த துணை
என் உயிர் பிறந்த நதி
சங்கமிக்கும் சமுத்திரம்
தொலைந்து போனதாய்
நான் என்னையே ஏமாற்றியிருந்த
என் ஆன்மாவை
வெளிச்ச கிரணத்தின்
வெள்ளி பாத்திரமாய்
பாதுகாத்திருந்த
என் நண்பன்
இது எதுவுமே தெரியாமல்
தறிகெட்டு தடங்கள் இழந்து
வேகத்தில்
விழப்போன வேளையில்
விரைந்து பற்றிக்கொண்ட
என் பற்றுக்கோடு.

நேசித்த மனது
ஏற்றிவைத்த
சின்ன ஒளியாய்
சிங்கார சிரிப்பில்
முகையை தொட்ட
முதல் பனித்துளியாய்
பரவசப்படுத்திய
ஓர் அன்பு
இரணங்களை விசிறிவிட்டு
கால்களுக்கு தோள்கொடுத்த
ஓர் அன்பு
திடும் என்று உதறிக்கொண்டபோது
மொட்டை மரத்தில்
கலைந்த கூட்டில்
தன்னந்தனியளாய்
இனி எதுவும் இல்லை
உயிரைக் கரைத்து ஓலமிட்ட
அந்தக் கணத்தில்
இதோ உன் பற்றுக்கோடு
பற்றிக்கொள் என்று
புரிந்தது எனக்கு!
ஓ!!
இது பாட்டியின்
சொரசொர கைகள் அல்லவா?
நிமிர்ந்து பார்த்தேன்
நித்திய சூரியன்
கண்ணில் இறங்கியது நிலவாய்!
நானே எல்லாம் என்று.
வார்த்தையின் பொருள் புரிய
மகா சமுத்திரத்தின் மடியில்
பாதுகாப்பாய்
அகன்று விரிந்தது
என் கர்வம்.








எழுதியவர்:  ஜெயஷாந்தி

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

நண்பனுக்கு...

நான்
பட்டம் விடவும்
பயன்படாத
குப்பைக் காகிதம்
என்றுதான்
எண்ணியிருந்தேன்.
அக்கறை மை தோய்த்து 
என் கண்களில் 
உன் அன்பை
நீ எழுதிய பொழுதுதான்
சிறகின்றி கூட நானும்
வானம் தொட முடியும்
என்றுணர்ந்தேன்


பாலை வெளியில்
தகிக்கும் மணலில்
நழுவிய என் கால்கள்
உன் சிநேகக்
கரங்களில்தான்
வலுப் பெற்றன.


உன் நினைவுகள்
தனிமையிலும்
தலை கோதிவிட்ட பொழுதுதான்
நட்சத்திரக் கூட்டங்களில்
நானும் ஒருத்தியாய்
ஒளிர்ந்திருக்கக் கண்டேன்


பாச இழை பின்னிய
உன் மடியில்
மனம் களைப்பாறிய 
வேளையில்தான்
சதா குழம்பிய
என் சிந்தனையில்
தெளிவு கண்டேன்


கள்ளிச்செடி என்று
கவிழ்ந்து போயிருந்தேன்
புதை மணலுக்குள்
கற்பகத் தருவாய்
கம்பீரமாய் நிற்கச் செய்தது
உன் சிநேகம்.


உன் தோழமைக் காற்றை
சுவாசிக்கையில்தான்
பழைய ரணங்களின்
சுவடுகள் கூட
சொல்லாமல் கரையேற
என்
ஆழ்மனசு கூட
ஆசுவாசம் பெற்றது.




எரிகற்கள்
எதுவும் இல்லாமல்
விரல்களைத் தீண்டும்
மீன்களை
விண்மீன் கூட்டத்தைப்
பார்க்கின்ற பரவசத்துடன்
குளத்தங்கரையின்
கடைசிப் படிக்கட்டில்
மடி நிறைய புளியம் பழத்துடன்
ஒய்யாரமாய் வேடிக்கை பார்த்திருக்கும்
சிறுமியாய் மாறிய
நான்
குழந்தையாய் மலர்ந்த
அந்த வேளையில்தான்
நீ
வெடிவைத்தாய்
எல்லாம்
ஆற்று மணலில்
வீடுகட்டி விளையாடிய
குழந்தைகளின்
கூட்டாளித்தனமாய்
நினைத்துக் கொள் என்று!
எப்படி நண்பா?
இடையறாத
என் கண்ணீர் நெடி 
எட்டவில்லையா உன்னை...






எழுதியவர்: ஜெயஷாந்தி