திங்கள், 28 மார்ச், 2016

'தலித் எழுத்தாளர்' அடையாளம் என்ற தீண்டாமை

'தலித்  எழுத்தாளர்' அடையாளம் என்ற தீண்டாமை


கொடிய  தீண்டாமையின்  நெடிய வரலாறு  பற்றிய எந்தப் புரிதலும் இல்லாதவர் போல பாரதீய 
ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் அவர்கள் வர்ணாசிரமம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்கு எழுத்தாளர் ‪#‎இமையம்‬ அவர்களின் மறுப்பும் கருத்தும் இன்றைய 'The Hindu' ஆங்கில நாளிதழில் வெளி வந்துள்ளது . வர்ணாசிரமம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்கு எழுத்தாளர் ‪#‎இமையம்‬ அவர்களின் மறுப்பும் கருத்தும் இன்றைய 'The Hindu' ஆங்கில நாளிதழில் வெளி வந்துள்ளது.சாதீயம்,பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என சமூகப் பிரச்சினைகள் பற்றி தனது கலாபூர்வமான படைப்புக்களின் வழியாக நம்மிடம் தொடர்ந்து உரையாடி வரும் திரு #இமையம் சுருக்கமாகவும்செறிவாகவும் தனது மறுப்பினைப் பதிவு செய்துள்ளார்.தனது கருத்துக்கு அரணாக அயோத்தி தாஸ் பண்டிதரின் சிந்தனையையும் பகிர்ந்து கொண்டுள்ளார் 


.சாதீயம் பற்றிய இல கணேசனின் கருத்துக்கு 'தலித் அறிவுஜீவிகளின் ' எதிர்வினை என்ற வாசகத்துடன் இமையம் அவர்களின் கருத்து பிரசுரிக்கப் பட்டுள்ளது .ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆணவக் கொலைகளாக அதிகரித்து வரும் இன்றைய சூழலில் சாதிக் கொடுமைகள் பற்றி எழுதுவது சிந்தனையாளர்கள் மற்றும் ,படைப்பாளிகளின்  {அவர்கள்  எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் } கடமையாகிறது.அந்தக் கடமையைச் சரியாகச் செய்கிறார் என்பதற்காகவே எழுத்தாளர் #இமையம் அவர்களை 'தலித்எழுத்தாளர்' 'தலித்அறிவுஜீவி' என்று ஒரு வட்டத்துக்குள் அடையாளப் படுத்துவது எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை. சாதீயத்துக்கு எதிரான வெறும்'பரப்புரையாக' இல்லாமல் சிறந்த கலைப் படைப்புக்களாக நிலைத்து நிற்பவை அவரது நாவல்களும் சிறுகதைகளும் நாடகங்களும்!  

தலித்துகள் பற்றி எழுதுவதனால் ஒருவரை தலித் எழுத்தாளர் என்று இங்கு அடையாளப் படுத்துவதில்லை.எழுதுபவர் தலித்இனத்தவர் என்றால் மட்டுமே இப்படி அடைமொழி கொடுத்து அழைக்கப் படுகிறார்.பெண்களின் உலகம் ,அவர்களின் வலி ,தாராளமயமாக்கலில் சந்தைப் படுத்தப் பட்டு விட்டகல்வி என்று பல விஷயங்களை எழுதி வரும் இமையம் அவர்கள் இந்த அடையாளங்களுக்குள் அடைபட வேண்டியவர் இல்லைஎன்பது என்னுடைய கருத்து.

ஒரு சந்தேகம் !

நமது சமூகத்தில் யாரேனும் 'நாடார் எழுத்தாளர்' 'பிள்ளைமார் எழுத்தாளர்' 'மீனவ எழுத்தாளர்' அல்லது 'பிற்படுத்தப் பட்ட இனத்து எழுத்தாளர்'  அல்லது 'மிகவும்
பிற்படுத்தப் பட்ட இனத்து எழுத்தாளர்' என்று அடைமொழி கொடுத்து அடையாளப் படுத்தப் பட்டிருக்கிறார்களா?

தலித் மக்களின் வாழ்வையும் கண்ணீரையும் ,பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப் பட்டவர்களாக ,ஒதுக்கப் பட்டு வாழும் அந்த விளிம்பு நிலை மக்களின் அவலங்களையும்  பதிவு செய்யும் ஒரு படைப்பாளி தலித் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரை  ,"தலித் எழுத்தாளர் என்று அழைப்பதும் தீண்டாமையே 

வெள்ளி, 25 மார்ச், 2016

கிங்' விஜயகாந்த் குடும்பத்தாரின் தமிழ்ப் பற்று ?

'கிங்' விஜயகாந்த் குடும்பத்தாரின் தமிழ்ப் பற்று ?

தமிழகத்தை வாழ வைக்க இனி விஜயகாந்தை விட்டால் ஆளில்லை ,நாதியற்றுப் போன தமிழர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் பவர் ஸ்டார் [அட நடிப்புல பவருங்கோ} விஜயகாந்த் என்று அவரை முதலமைச்சர் வேட்பாளராக்கி விட்டார்கள் மக்கள் நலக் கூட்டணியினர் .ஒரு சமூகத்தின் தலைவனாக வர விரும்புபவன் அந்த மண் சார்ந்தவனாகவும் மக்களில் ஒருவனாகவும் இருக்க வேண்டும் .அந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பவனாக ,அந்த மக்களின் நலன் நாடுபவனாகவும் இருக்க வேண்டும் .அந்த மண்ணின் மொழியையும் பாதுகாப்பவனாக இருக்க வேண்டும் .ஏனென்றால் ஒரு சமூகத்தை ,ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் ஆயுதம் ஏந்தத் தேவையில்லை ! அந்த இனத்தின் தாய் மொழியினை அழித்தாலே போதும் !அவர்கள் அடையாளாம் இழந்து அழிந்து போவார்கள் .ஏனென்றால் தாய் மொழி என்பது ஒரு இனத்தின் வாழ்வு நெறிகளின் ,பண்பாட்டின் ,கலாச்சாரத்தின் அடையாளம் !

எதற்கு இவ்வளவு பீடிகை என்று யோசிக்கிறீர்களா ?கிங் விஜயகாந்த் தெலுங்கர் என்றாலும் தமிழை நேசிப்பவர் என்ற ஒரு எண்ணம் இங்கு நிலவுகிறது .தமிழ் எனது மூச்சு தமிழ் எனது பேச்சு அதுவே எனது வாட்ச்சு என்று சினிமாவில் பூச்சாண்டி போல் கண்களை உருட்டிப் பேசியவராயிற்றே !
அது எவ்வளவு பெரிய பொய் ! சென்னையின் பிரபலமான கல்லூரியில் தமிழ்த் துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம் ! தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களுக்காக அடிப்படைத் தமிழ் வகுப்பு  நடத்தப் படும் ,.பல்கலைக் கழக உத்தரவின் பேரில் நடைபெறும் இந்த வகுப்புக்களில் பங்கெடுத்து ,தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டதாரியாக முடியும் .பெரும்பாலும் மணிப்பூர் ,நாகலாந்து ,ஆந்திரா ,கேரளா கல்கத்தா போன்ற மாநிலங்களிலிருந்தும்  வெளி நாடுகளிலிருந்தும் வந்து படிக்கும் மாணவர்கள் இதில்  பங்கெடுப்பார்கள் ,

அ னா ஆவன்னா விலிருந்து தொடங்கி உயிர், மெய், உயிர்மெய் எழுத்து,எனத் தொடர்ந்து பிறகு அணில், ஆடு ,காய் கனிகள் என்று சொல்லிக் கொடுப்பதற்குள் ஆசிரியருக்குத் தாவு தீர்ந்து விடும்  .ஒரே வகுப்பில் ஒரே நேரத்தில் 60 க்கும் மேற்பட்ட பலதுறை பயிலும்  மாணவ மாணவியருக்குத் தனித் தனியாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும் .  பெரும்பாலும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும்  கேரளாவிலிருந்து வந்து படிக்கும் மாணவ மாணவியரும் தேர்வுக்காக என்று இல்லாமல் ஆர்வத்துடனேயே கற்றுக் கொள்வதைக் கவனித்திருக்கிறேன்.

ஒரு நாள் அந்த வகுப்பில் கையில் பாடப் புத்தகமோ எழுதுவதற்கு நோட்டோ எதுவும் இல்லாமல்  ஒரு மாணவன் முன் வரிசையில் அமர்ந்து பேசிக் கொண்டும்  மற்றவர்களையும் எழுத விடாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன் .அவனை அது வரையில் அந்த அடிப்படைத் தமிழ் வகுப்பில் நான் பார்த்ததேயில்லை . விசாரித்த   போது பெயர் சண்முக பாண்டியன் என்பதும் அவன் கல்லூரிக்கே ஒழுங்காக வருவதில்லை எனவும் தெரிந்தது .இனி தவறாது வகுப்புக்கு வருவதாகச் சொன்னவன்  முந்தைய நாளைப் போலவே நோட்டுப் புத்தகம் எதுவும் இன்றி வந்து  சள சளவென்று பேசிக் கொண்டிருந்தான் .அவனுடைய நோட்டு எங்கே எனக் கேட்டதும் பக்கத்திலிருந்தவனின் நோட்டுப் புத்தகத்தைப் பிடுங்கி தன்னுடையது என்று காட்டிச் சாதித்தான் .

அவனுக்கு என்னதான் பிரச்சினை என்று கேட்டேன் .தனக்குத் தாய்மொழி தமிழ் இல்லை என்றான் .அப்படிப் பட்டவர்களுக்காகத் தான் இந்த வகுப்பு ,ஆப்பிரிக்க தேசத்து மாணவர்கள் கூட ஆர்வத்துடன் படிக்கிறார்கள் என்றதும் "இதப் படிக்கலேன்னா     என்ன பிரச்சினை "எனக் கேட்டான் .டிகிரி வாங்க முடியாது என்றேன் என்னால் கண்டிப்பாகத் தமிழ் படிக்க முடியாது  .விதி விலக்கு வாங்க முடியுமா என்று கேட்டான் ஏதோ தோஷத்துக்குப்  பரிகாரம் உண்டா என்பது போல !விதி விலக்கு உண்டு  சில மாற்றுத் திறனாளிகள்  குறிப்பாகப் பார்வையற்றோர் விலக்கு பெறமுடியும் என்பதைத் தெரிவித்தேன் .சரியான மூளை வளர்ச்சி இல்லாமல் படிக்க வரும் மாணவர்களுக்கும்  மொழிப் பாடத்திலிருந்து பல்கலைக் கழகத்தால் விதி விலக்கு வழங்கப் படும் என விளக்கினேன் .பலத்த யோசனையுடன் சென்றான் .


மீண்டும் சில நாட்கள் அவனை வகுப்பில் காணவில்லை .விசாரித்த பொழுது "அவன்  எப்பொழுதும் இப்படித்தான் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 மதிப் பெண்களுக்கும் குறைவா வாங்கியிருந்தான் .நல்லா படிக்கிற யாருக்காவது அந்த சீட் ஐக் கொடுத்திருந்தால் பிரயோஜனமாயிருந்திருக்கும்  என்று மாணவர்கள் அலுத்துக் கொண்டார்கள் 1150 மதிப்பெண் பெற்ற படைப் பூக்கமும் ஆர்வமும் கொண்ட  பல ஏழை மாணவர்களுக்கே அக் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்   துறையில் இடம் கிடைக்காத போது இப்படிப் பட்ட மாணவனுக்கு எப்படிக்  கிடைத்தது ?
நான் திகைத்துப் போய் நின்றிருக்க ,அவன் விஜயகாந்தின்   மகன். .முதலில் அவனுக்கு சீட் தரமுடியாது என்றுதான் மறுக்கப் பட்டது .சட்ட மன்ற எதிர்க் கட்சித் தலைவர் மகனுக்கே இடம் தர முடியாதா?  என்று விஜயகாந்த் நேரில் வந்து சண்டை போட்டு வாங்கினாராம்  என்றார்கள் மாணவர்கள் .அரசல் புரசலாகக் கேள்விப் பட்டிருந்த விஷயம்தான் .ஆனால் அயர்ச்சியாக இருந்தது ,

நீண்ட இடைவெளிக்குப் பின் கிங் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் என்னை வகுப்பில் வந்து சந்தித்தான் .முகத்தில் விடுதலை உணர்வும் சந்தோஷமும்  ஆர்ப்பரித்தன .கையில் வைத்திருந்த பேப்பரைக்  கொடுத்தான் தான் மொழிப் பாடம் அதாவது அ ,ஆ என அடிப்படைத் தமிழ் கூடப் படிக்கத் தேவையில்லை என்று பல்கலைக் கழகத்திலிருந்து விலக்கு வாங்கி விட்டதாகக் கூறினான்  ."எப்படி விலக்கு வாங்கினாய் ?உடலில் ஊனம் என்றா ??அல்லது மூளை வளர்ச்சி குன்றிய மாணவன்? என்றா என நான் அவனிடம் கேட்கவில்லை  .கம்பீரமாகத் திரும்பிச் சென்று கொண்டிருந்த அவனைப் பார்ப்பதற்கே  அருவருப்பாக உணர்ந்தேன் .


அதே அருவருப்பான உணர்வினை கிங் விஜயகாந்த் தமிழக முதல்வருக்கான வேட்பாளர்  என இடது சாரி காம்ரேட்டுகள்  சொன்ன கணத்திலிருந்து உணர்கிறேன் .கிங் விஜகாந்துக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று தானே சொல்லித் திரிகிறார் .அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் தமிழ் மொழியே பிடிக்காது  !அவர்களைப்  பொறுத்த வரை தமிழ் தீண்டத் தகாத மொழி.  எம் மொழி பல்லாயிரம்  ஆண்டுகள் பழமையும் வளமையும் கொண்ட மொழி !அமுதத் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட எங்கள் தமிழ் இனம்  தொன்மையான நாகரிகமும் பண்பாடும் கொண்ட மாண்புயர் இனம் !
எங்கள் மொழியினை வெறுக்கும் ஒரு மனிதன் ,திரைப் பட நடிகன் {அதுவும் லாஜிக் எதுவும் இல்லாத மசாலாத்திரைப்படம்}  என்பதைத் தவிர எந்த அடையாளமும் இல்லாத ஒருவர் எம் மண்ணையும் மக்களையும்
ஆளத்  துடிப்பது எங்கனம்?எம் தமிழ் மொழியை வெறுப்பவர் எம் மண்ணில் வாழ்வதற்கே தகுதியற்றவர்  .இதனை இடது சாரி அறிவு ஜீவிகள்  உனராமலிருக்கலாம் .ஆனால் எம் மக்கள் ஏமாளிகள் இல்லை .அதனைத் தேர்தல் முடிவுகள் சொல்லும் 

ஞாயிறு, 13 மார்ச், 2016

பேராசிரியர் அருணன் அபத்தங்களின் அவதாரம் பாகம் 1

பேராசிரியர் அருணன் அபத்தங்களின் அவதாரம் பாகம் 1

தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது .வாக்காளப் பெருமக்களைக் குழப்பி முட்டாளாக்க முனையும் வேலையில் சி.பி.எம் கட்சியினைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் போன்றவர்களின் தொலைக்காட்சி விவாதக் கோமாளித்தனங்களையும் ,எதிராளியைப் பேச விடாது கத்திக் குதறும் பண்பாடற்ற செயல்களையும் கண்டு சின்ன வயது பூச்சாண்டி பிம்பங்கள் வந்து பயமுறுத்துகின்றன .இதையெல்லாம் கூடத் தாங்கிக் கொள்ளலாம் போலத் தெரிகிறது .மெத்தப் படித்த பேராசிரியர் அருணன் அவிழ்த்து விடும் பொய்களைக் கேட்டு ,சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் என்று மனம் குமுறுகிறது .

சில நாட்களுக்கு முன்பு 7 நியூஸ் தொலைக் காட்சி விவாதத்தில் 'நாம் தமிழர் கட்சி ' யைச் சேர்ந்த திரு .அறிவுச் செல்வன் என்பவரைப் பேச விடாமல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த பேராசிரியர் அருணன் "நீங்கள் பிராமணியக் கடவுளைத் தூக்கிப் பிடிக்கிறீர்கள் ,முருகப் பெருமானுக்காகப் போராடுகிறீர்கள் ,நீங்கள் இந்து முன்னணியின் மறு பதிப்பு என்று பித்துப் பிடித்தவர் போலக் கத்திக் கொண்டிருந்தார் .தமிழர்களின் மரபு ,கலாச்சாரம் ,பண்பாடு ,நெடிய வரலாறு இவை பற்றியும் அதில் குறிஞ்சி மலைக் கடவுளாகிய முருகப் பெருமானின் இடம் பற்றியும் அறிவுத் தெளிவோ புரிதலோ இல்லாமல் பேசிக் கொண்டிருத்த பேராசிரியர் அருணன் இனி விவாதங்களுக்கு  வருவதற்கு முன்னால் இது குறித்துப் படித்து தெரிந்து கொண்டு வருவது நல்லது .

தமிழர்களின் மொழி,அதன் இலக்கியச் சிறப்பு ,வழிபாட்டு முறைகள் ,வாழ்வியல்  நெறிகள் சூழலியல் இயற்கையோடு இயைந்த அவர் தம் வாழ்வு என எல்லாப் பரிமாணங்களிலும் அவர்களின் பெருமைக்குரிய பண்பாட்டு அடையாளமாக ஒளிர்பவர் வேலன் என்ற முருகன் .'நீங்கள் மலைவாழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள் ?'என்று நாம் தமிழர் கட்சியினைப் பார்த்துக் கேள்வி எழுப்பும் அருணன் மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் என்று சங்க இலக்கியத்தில் போற்றப் படும் முருகன் தமிழர்களின் அடையாளம் என்பதை வசதியாக மறந்து விட்டுப் பேசுகிறார் .

"தெலுங்கரான பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்கள் இதோ "என்று சில நூல்களின் பெயர்கள் இணையத்தில் பட்டியலிடப் பட்டிருக்கின்றன .இதன் மூலம்  என்ன செய்தி சொல்ல முன்வருகிறார்கள் ? தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும்ஆதராகவோ ஏன் எதிராகவோ கூட தமிழிலேயே ஒரு வெள்ளைக்காரன் கூட கட்டுரை எழுத முடியும் .அதனாலேயே அவர் தமிழராகி விடமுடியுமா ?  இத்தாலி நாட்டு வீரமாமுனிவர் செய்த தமிழ்த் தொண்டை விடவா ஒருவர் அதிகம் செய்து விட முடியும்  ?அவர் இருந்த போதும் இறந்த பிறகும் அழைக்கப் படுவது இத்தாலியர் என்றுதானே ?

அப்படி என்னதான் தெலுங்கர் பேராசிரியர் அருணன் தமிழில் எழுதி விட்டார்
என்று பார்த்தால் 'தமிழரின் தத்துவ மரபு ' என்ற நூல் அதுவும் இரண்டு பாகங்கள் !  ஒவ்வொரு சமூகத்திலும் வெவ்வேறு காலக்கட்டங்களில் அந்தந்த சூழலுக்கேற்ப எழுதப் படும்   இலக்கியங்களில் மாக்ஸியத்தின் பொருள் முதல்வாதத்தை முன் வைத்து அக் குறிப்பிட்ட மக்களின் தத்தவ விசாரத்தையும்  ,மரபையும்  கண்டறிய முற்படுவது பார்வையற்றவர் யானையைத் தடவி அதனை விளக்க முனைவதைக் காட்டிலும் அபத்தமானது  . அதனால் தான்   மேட்டுக் குடியினரை மட்டுமே சென்றடைந்த ஓஷோ வின் தத்துவம் தமிழரின் வாழ்வில்  ஏற்படுத்திய தாக்கம் பற்றியெல்லாம் அருணன் எழுதியுள்ளார் .

தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்று தத்துவப் பேராசிரியராக விளங்கும் கத்தோலிக்கக்  குருவான பேராசிரியர் நிஷாந்த் இருதய தாசன் Nishant Irudayadason' ECOLOGICAL CONSCIOUSNESS IN THE MURUKAN CULT'என்ற தலைப்பில் எழுதியிருக்கும் ஆங்கிலக் கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கும் ஆழமான கருத்துக்கள் இங்கு நோக்கத்தக்கது .கீழை மேலை என எல்லா  தேசங்களிலும் எந்த ஒரு மதம் அல்லது கடவுள் கொள்கைக்கு மையமாகவும் மூலமாகவும் நமது  பூமியே இருக்கிறது என்றும் மதங்களின் சடங்குகள் ,வழிபாடுகள் அனைத்தும்  பிரபஞ்சத்தைப் பேணுவதற்கான நெறிகளாகவே வகுக்கப் பட்டுள்ளன என்றும் குறிப்பிடுகிறார் .அந்த நோக்கில் தமிழ்க் கடவுளாகிய முருக வழிபாடும் காலம் தோறும் அவரைப் பற்றி பரிணாமம் பெற்ற புராணங்களும்  இயற்கையோடு இயைந்த இறைச் சிந்தனைக்கு எப்படி விளக்கமாக  இருக்கின்றன என்பதனைச் சான்றாதாரங்களுடன் தெளிவு படுத்துகிறார் .முருகனது பிறப்பிலேயே பஞ்ச பூதங்களின் பங்கு இருப்பதனை தமது ஆய்வுக் கட்டுரையில் தகுந்த விளக்கங்களுடன் நிறுவியுள்ளார் .குறிஞ்சி நிலத்தின் தலைவனாகிய முருகன் ,தமிழ் மக்களின் தெய்வம் மட்டுமல்ல .மலை சார்ந்தும் காடு ,கடல் ,வயல்கள் சார்ந்தும் குறிஞ்சி ,முல்லை மருதம் நெய்தல் என நிலங்களில் தன்னை இணைத்து ,இயைந்து வாழ்ந்த தமிழரின் பழம் சிறப்பின் அடையாளம் !பண்பாட்டின் பெருமை மிகு குறியீடு  !

பின்னாளில் வைதீக நெறியின் கலப்பால் ஸ்கந்தனாக மாறிப் போன ஆதித் தமிழரின்  வேலன் பற்றிய செய்திகள் நிஷாந்த் இருதயதாசன் அவர்கள் கட்டுரையில் இடம் பெறவில்லையே என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அதைப் பற்றிய ஆய்வில் தாம்   ஆழமாக  ஈடுபட்டிருப்பதாகவும்  விரைவில் அதையும் ஒரு நூலாகக் கொண்டு வரவிருப்பதாகவும் தெரிவித்தார் ..பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பண்பாட்டுக் கலப்பு  தவிர்க்க முடியாது என்று தெரிவித்த அவர் வைதீக நெறியில் கலந்து வேறு ஒரு பரிமாணம் அடைந்திருக்கும் ஸ்கந்தனான முருக வழிபாடு ஏற்புடையது என்றாலும் ஆதி முருகனை மீட்டெடுப்பதும் நமது கடமை எனத் தெரிவித்தார் .அவர் அடுத்துக் கூறிய செய்தி மிக முக்கியமானது .அவ்வாறு மீட்டு எடுக்கும் முயற்சியில்தான் நாம் தமிழர் கட்சி ஈடு பட்டிருப்பதாகவும் அது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார் .பேராசிரியர் நிஷாந்த் இருதயதாசன் {Nishant Irudayadason} பெரும்பாலும் ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும்தான் கட்டுரைகள் எழுதுகிறார் என்றாலும் தம்மை ஆங்கிலேயன் என்றோ பிரெஞ்சுக்காரன் என்றோ சொல்லிக் கொள்வதில்லை  என்பது குறிப்பிடத்தக்கது .

இனி மேல் முருகன் பிராமணியக் கடவுள் என்று எகத்தாளமாக பேராசிரியர் அருணன் பேச முற்படுவதற்கு முன்னால் சங்க இலக்கியத்தில் முருகன் குறித்து  இடம் பெறும் வேலன் வெறியாட்டு போன்ற செய்திகளையெல்லாம் படித்து விட்டு  வருவது நல்லது .நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படை என்ற நூலில் தமிழ்க் கடவுள் முருகனின் ஆறு படை வீடுகளும் அவனது பெருமைகளும் விவரித்துக் கூறப் படுகின்றன .ஆனால் பிற்காலத்தில் வடமொழியில் உள்ள சிவசங்கரசங்கிதையின் ஒரு பகுதியான ஸ்கந்தனின் வரலாற்றைக் கூறும் கந்தபுராணம்  வடமொழி வைதீக நெறி கலந்து எழுதப் பட்டுள்ளது .இதனால் முருகன் தமிழ்க் கடவுள் இல்லை என்றாகி விடுவாரா ?

இடதுசாரிக் கொள்கைப் பிடிப்பும் அதே நேரத்தில் நல்ல இலக்கியத் தேர்ச்சியும் புலமையும் ஆழமான அறிவோடு பண்பட்ட உள்ளத்துடன் பழகுகின்ற  சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர்  இன்குலாப் பேராசிரியை சரசுவதி ராஜேந்திரன் போன்றவர்களுக்கு, தம்மையும் இடதுசாரி அறிவு ஜீவியாகக் காட்டிக் கொள்ளும் பேராசிரியர் அருணன் இழிவை உண்டு பண்ணுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும் .

பேராசிரியர் அருணனின் அடுத்த அபத்தமாக அவரது அர்த்தமற்ற பிராமணிய சாடல்  பற்றி அடுத்து பதிவு செய்கிறேன் இப்பவே கண்ணைக் கட்டுதே !

புதன், 24 பிப்ரவரி, 2016

ஜெயஷாந்தியின் பரணி கட்டுரையாளரின் கதை சாம்சன் துரை சா. உதவிப் பேராசிரியர், ஊடகக் கலைகள் துறை

ஜெயஷாந்தியின் பரணி
கட்டுரையாளரின் கதை
சாம்சன் துரை சா.
உதவிப் பேராசிரியர், ஊடகக் கலைகள் துறை
லொயோலா கல்லூரி, சென்னை-34
Loyola_Sam2000@Yahoo.Com
இலக்கியங்களிலிருந்து கதைக்கருக்கள் எடுக்கப்பட்டு திரைப்படத்திற்கேற்ற காட்சியமைப்பு கதைகளாக உருவாக்கப்பட்ட மரபு கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து உலகளாவிய நிலையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு பெற்ற ஜான் ஸ்டீஃபன் பெக் போன்ற இலக்கிய உலகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்கள், திரைக்கதைகளை எழுதியிருக்கிறார்கள்.
சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் அதற்குப் பின் வந்த நீதி நூல்கள், இடைக்கால இலக்கியங்கள், தற்கால இலக்கியங்களில் நாவல்கள், சிறுகதைகள் என்று தமிழில் காலம் தோறும் தோன்றிய இலக்கிய வகைகளிலிருந்து ஏராளமான கதைக் கருக்களை தமிழ்த் திரைப்படத்திற்கு எடுத்துக் கொள்ள முடியும். அந்த வரிசையில், 2001ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘பரணி’ என்ற நாவல் திரைப்படமாக்கப்படுவதற்குரிய கதையம்சத்தைக் கொண்டுள்ளது என்பதை விளக்குவதே இக்கட்டுரை.
“வார்த்தைகளின் வலிமை கொண்டு வாசகர்களை பார்க்கவும் கேட்கவும், அதையும் மீறி காட்சிப்படுத்தவும் செய்வது எழுத்தின் கடமை” என்கிறார் எழுத்தாளர் ஜோசஃப் கான்ராட். ஒரு நாவல் திரைப்படமாகும்போது வாசகன் படிக்கும் அனுபவத்திலிருந்து அவனைக் காட்சி உலகிற்குக் கொண்டு செல்கிறது. வரி வடிவில் இருக்கும் கதையைக் காட்சியமைப்பிற்குள் கொண்டு வருவது இயக்குநரின் திறமை மட்டுமல்ல; அவர் முன் வைக்கப்படுகின்ற பெரும் சவாலும் ஆகும். ஆனால், சில நாவல்கள் இயல்பாகவே காட்சியமைப்பினை எளிதாகப் பெற்றுவிடும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன. பரணி நாவலிலும் அந்த இலகுத் தன்மையைக் காண முடிகிறது.
கிராமப் பின்னணியில் ஆரம்பிக்கப்படுகின்ற கதையில், குடும்ப உறவுகளும் உணர்வுச் சிக்கல்களும் நடப்பியல் பாங்கில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
‘வக்கத்தவன்தான் வாத்தியார் வேலைக்குப் போவான் வசதியாயிருக்கிற நம்ம குடும்பத்திலயிருந்து நீ ஏன் வாத்தியார் வேலைக்குப் போகணும்’ என்று தன்னுடைய தாய் எவ்வளவோ மறுத்தும் ஆசிரியர் பணிக்கே செல்ல வேண்டும் என லட்சிய நோக்கத்துடன் அப்பணியைத் தேர்ந்தெடுக்கிறான் சிவனேசன்.
கணவனை இழந்து கைம்பெண்ணாக வயல்வெளியில் வேலை செய்து உருக்குலைந்து போகும் பேச்சி, தன் மகன் கருப்பண்ணனை நன்றாகப் படிக்க வைக்கிறாள். அவனோ பட்டணத்துப் படிப்பை முடித்ததும் மேல்தட்டு வர்க்கத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தன் தாயையும் தங்கை செண்பகத்தையும் கிராமத்தையும் ஒரேயடியாகப் புறக்கணித்து விடுகிறான். இதனால் படிப்பின் மீதே வெறுப்பு கொள்ளும் பேச்சி, தன் மகள் செண்பகத்தின் படிப்பை நிறுத்திவிட்டு வயல் வேலைக்கு அழைத்துச் செல்கிறாள். செண்பகம் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் சிவனேசனால் விரும்பித் திருமணம் செய்துகொள்ளப்படுகிறார். அவர்களுக்குப் பிறக்கின்ற மூத்த மகளான பரணியின் அடையாளச் சிக்கல்களைப் பிரதானப்படுத்தி எடுத்துச் செல்கிறது நாவல்.  கலப்புத் திருமணம் பற்றிய பல்வேறு சர்சைகளும் சச்சரவுகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், இந்த நாவல் திரைப்படமாகும்பொழுது விவாதிக்கப்படும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கக் கூடும்.
யதார்த்தமான கிராமங்களும், அழகான குடும்ப உறவுகளும், நெகிழ வைக்கும் சின்னச் சின்ன சுவாரஸ்யமான நிகழ்வுகளுமாகச் செல்லும் கதை ஓட்டத்தில், பெண்களின் நிலையும் விவாதிக்கப்படுகிறது. பள்ளிப் படிப்பு இல்லையென்றாலும் சிவனேசனால் புத்தகங்கள் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் செண்பகம், அறிவுபூர்வமாகச் சிந்திப்பவளாகவும் பேசுபவளாகவும் காட்டப்பட்டிருக்கிறாள். மகள் பரணியும் தந்தையைப் போலவே சிந்திப்பவளாகவும், நிறைய கேள்விகள் கேட்பவளாகவும் உருவாக்கப்பட்டிருப்பதுடன், தனித்தன்மை கொண்டவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.
கல்லூரியில் படிக்கும் பரணி, அவள் தாய்மாமன் கருப்பண்ணன் மகனாலும், அவனுடைய நண்பனாலும் காதலிக்கப்படுவதும், கடைசியில் அவள் கல்யாண விஷயத்தில் எதிர்பாராத முடிவை எடுப்பதும் கதையின் உச்சம் எனச் சொல்லலாம். 
பரணியுடன் விடுதியில் தங்கிப் படிக்கும் இலங்கையைச் சேர்ந்த காந்தா, நாகலாந்தைச் சேர்ந்த ஷெரில் மற்றும் கிராமத்துப் பெண்ணான சொர்ணா ஆகியோரது குடும்பமும் கதைகளும் தனித் தனியே திரைப்படமாக்கக் கூடிய அளவுக்குச் செறிவான காட்சியமைப்புடன் உணர்ச்சி பூர்வமாக விவரிக்கப்பட்டுள்ளன. ஒரு நல்ல திரைப்படமென்பது கலை படைப்பாகவும், அதே நேரத்தில் சமூகத்திற்குத் தேவையான கருத்துக்களோடு விறுவிறுப்பாகவும் எடுக்கப்பட வேண்டும். அதற்கு வலுவான கதையமைப்பும், கதாபாத்திரங்களும் அவசியம்.
கல்வி வியாபர மயமாகிவிட்டது என்று கவலைப்பட வைக்கும் இக்காலச் சூழலில் ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சிவனேசன் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. ஊரில் ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும் என்று, அதற்காக இடையறாது முனைப்புடன் பாடு படுவதும், கிராமத்துக்கு நூலகம் கொண்டு வருவதற்காக உழைப்பதும், குடும்பத்தின் நல்ல தலைவனாகத் திகழ்வதோடு, சமூக அக்கறை கொண்ட ஆசிரியருமாகப் படைக்கப்பட்டுள்ளார் சிவனேசன்.
வன்முறைகளும், நோக்கமற்ற காதலும் கொண்ட திரைப்படங்கள் பல இன்று நம் தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை அமைப்பான குடும்பங்களின் அற்புதமான உறவுகளைப் பற்றிப் பெரும்பாலும் பேசுவதில்லை. பரணி நாவலில், பரணியைத் தவிர, அவளது தம்பியர் கணேசன் மற்றும் முருகன் இவர்களுடைய பாசம், சின்னச் சின்ன சண்டைகள், பிறகு விட்டுக் கொடுத்தல் என்று குடும்பங்களில் நிகழும் சிறு, சிறு சம்பவங்களால் பின்னப்பட்டுள்ளக் கதை, உணர்வு பூர்வமானதாக உள்ளது.
குண்டாக இருக்கும் கணேசன் எப்பொழுதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதும், பாம்பு பிடிப்பதும், புத்தகப் பையில் உண்டிகோலை எடுத்துச் செல்வதும், தம்பி வைத்திருக்கும் மயிலிறகை எடுத்து வைத்துக்கொண்டு ‘குட்டிப் போடுதான்னு பார்க்கிறேன்’ என்று அவனைச் சீண்டுவதும், மேலும், கண் திறக்காத அணில் குட்டிகளை வீட்டுக்குக் கொண்டு வந்து இங்க் ஃபில்லரால் பாலூட்டி ரகசியமாக வளர்ப்பதுமாகக் கதையோட்டம் சுவாரஸ்யமான நிகழ்வுகளால் விறுவிறுப்பாகக் கொண்டு செல்லப்படுவதோடு குடும்ப அமைப்பின் அழகும் தேவையும் உறுதி செய்யப்படுகிறது. இந்தக் காலத்திற்கும் தலைமுறைக்கும் நிச்சயமாக இது தேவைப்படுகின்ற படம் என்பதற்கு இதுவே பெரும் சான்றாகும்.
குழந்தைகளின் அற்புதமான உளவியல் உலகமும், இயற்கையிலேயே அவர்களுக்கு இருக்கின்ற முன்னுணர்வு ஆற்றலும் கணேசன் பாத்திரம் வழியாக புலப்படுத்தப்படுவதோடு கதையை நகர்த்துவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திரைப்படத்திற்கே உரிய திருப்புமுனைகள் பல இந்த நாவலில் இடம்பெற்றுள்ளன. தன் குடும்பத்தாரால் மட்டுமல்ல, ஊர் மக்கள் அனைவராலும் நேசிக்கப்படும் சிவனேசன், உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுவிட்டதாக வரும் செய்தியும், ஊர் மக்கள் அதிர்ச்சியும் அழுகையுமாக இருக்க, செண்பகம், பரணி, கணேசன், முருகன் கையற்ற நிலையில் இருக்க, அவர் பக்கத்து ஊர் பிரச்சினையை சமாளித்துவிட்டு கம்பீரமாகத் திரும்பி வருவதும் பரபரப்பானதும் பரவசமானதுமான காட்சியமைப்பாக இருக்க முடியும். அதே போல, தாயையும், தந்தையையும், ஊரையும் துறந்து போன கருப்பண்ணன் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, செண்பகமும் பரணியும் அவரைச் சந்திப்பதும், கதையின் அடுத்தத் திருப்பு முனையாகவும், பரணியின் திருமணம் பற்றிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்துவதாகவும் கதைப் பின்னல் சுவாரஸ்யமாகச் செல்கிறது. திரைப்படத்திற்கேற்ற கதைக் களங்களும் கூட சூரியகாந்தி வயல்களும், பச்சை பசேல் என்ற கொடிக் கால்களுமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன.
உழைக்கும் கிராமத்துப் பெண்களின் கதை முன்னிறுத்தப்பட்டுள்ளது. பரணி நாவலின் பெரிய சிறப்பு. அதுவே இக்கதை திரைப்படமாக்கப்பட்டால் பெரும் பலமாகவும் அமையும்.
பதிப்பாசிரியர் பதிவு:
‘நூற்றுக்கு நூறு’ படத்தில் காட்டப்படும் அப்பழுக்கற்ற கல்லூரி பேராசிரியரை நினைவுபடுத்தும் கிராமத்து ஆசிரியர் சிவனேசன் கதாபாத்திரமும், குடும்ப உறவுகளின் அழகை பெண்ணிய சிந்தனைகளோடு கலந்து கொண்டு செல்லும் பாத்திர படைப்புகளும் வலுவான ஒரு திரைக்கதைக்கு பலமாக அமையும்.

*****

திங்கள், 8 பிப்ரவரி, 2016

'இறுதிச்சுற்று' - திரைப்பட விமர்சனம்

- கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்ற அசட்டு வாதத்தை முன்வைத்து - 

முகநூல் பக்கத்தில் சிலர் இறுதிச்சுற்று கிறிஸ்தவத்திற்கு எதிரான படம், நல்ல பெண் இயக்குநர் தமிழ் திரையுலகிற்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது இதுபோன்ற பெண் இயக்குநர்களின் வருகைக்காகத்தானா போன்ற புலம்பல்களைப் பார்க்க நேரிட்டது. இதற்காகவே இறுதிச்சுற்றுப் படத்தை உடனடியாகப் பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். போலியான மதச் சார்பின்மைவாதிகளின் பிதற்றலே முகநூல் பக்கத்தில் நான் பார்த்தது என்பதைப் படத்தைப் பார்த்ததும் புரிந்துகொள்ள முடிந்தது.

வலுவான கதையும், திரைக்கதை அமைப்பும் காட்சிக்குத் தேவையான பொருள் செறிந்த வசனங்களும் மாதவன் மற்றும் உண்மையில் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங்கின்  தேர்ந்த நடிப்பும், ஒவ்வொரு காட்சியிலும் மின்னிய இயக்குநரின் சிந்தனைத் திறனும், வேகமான காட்சி நகர்வும், வாழ்க்கையைப் போலவே எதிர்பாராத திருப்பங்களுமாக அழுத்தமான தனி முத்திரை பதித்திருக்கும் திரைப்படம் இறுதிச்சுற்று.

பொதுவாக யாரும் கையாண்டிராத பாக்சிங் துறையில் பெண்கள் பற்றிய கதைக்கருவை எடுத்துக்கொண்டு பல்வேறு துறைகளைப் போலவே இந்த விளையாட்டுத் துறையிலும் பெண்கள் எதிர்கொள்ளும் அவமானங்கள், வக்கிர மனிதர்களின் பாலியல் வன்கொடுமைகளை வன்மையாகவும், அதே நேரத்தில் கொஞ்சங்கூட விரசம் கலக்காமலும் சொல்லும் விதத்தில் கதையை நுட்பமாகவும், கவனமாகவும் கையாண்டிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

இப்படத்தைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய இருக்கின்றது. ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு கிறிஸ்தவத்திற்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான படம் போல் முகநூல் பக்கங்களில் ஒருசிலரால் ஏன் உருவாக்கப்பட்டது என யோசித்தால், ஒரே ஒரு பதிலை அவர்கள் தருகிறார்கள்.
சாதாரண ஒரு மீனவக் குப்பத்தில் பிறந்து வளரும் இரு பெண்களின் தந்தையான சாமிக்கண்ணு, பொறுப்பின்றித் திரிபவராகவும், பெரும் குடிகாரராகவும் வலம் வருகிறார். (தமிழ் நாட்டில் நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்).

குத்துச்சண்டையில் தேர்ச்சி பெற்று எப்படியாவது போலீஸ் வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் என பல வருடங்கள் விடாது முயற்சி செய்துகொண்டிருக்கும் மூத்த பெண், விளையாட்டுத்தனமும் துடுக்குத்தனமுமாக இருந்தாலும், மொத்த குடும்பத்திற்கும் சோறு போடுவதற்காகவும், தனது தமக்கை குத்துச்சண்டையில் தேர்ந்து போலீஸ் வேலைக்குப் போய்விட வேண்டும் என்று மீன் விற்கும் இரண்டாவது பெண். இவர்களுடைய தந்தையாக வருகின்ற சாமிக்கண்ணு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து, “இப்ப நான் சாமிக்கண்ணு இல்ல. சாமுவேல்.” எனத் தள்ளாடியபடியே சொல்வதும், அதே தள்ளாட்டத்துடன் “அல்லேலூயா” கோஷம் போடுவதும் வேடிக்கையாக இருப்பதுபோல் தோன்றினாலும், உண்மையில் யோசிக்க வைக்கிறது. அந்தக் காட்சியில், ‘காசுக்காக மதம் மாறிட்டியா?’ என சாமுவேலாகிப் போன சாமிக்கண்ணுவின் மனைவி கத்துவதும், சில போலி மதச்சார்பின்மை பேசுபவர்களுக்கு உறுத்தியிருக்கிறதுபோலும்! ‘காசுக்காக மதம் மாறிட்டியா?’ என்ற கேள்வியில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கிறிஸ்தவம் வேர்விட்டு எழுந்து நிற்கும் இடங்களிலெல்லாம் மதம் மாற்றப்பட்டவர்கள் ஆன்மீக காரணத்திற்காக அல்ல, ஏதேனும் ஒரு உலகக் காரணத்துக்காகவே அந்த மதத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் மணப்பாடு பகுதியில் ஒரே நேரத்தில் கத்தோலிக்க மதத்தைத் தழுவிய ஆயிரக்கணக்கான மீனவர்கள் இஸ்லாமிய படையெடுப்புக்கு அஞ்சியே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டதாக வரலாறு சொல்கிறது. எந்தக் கத்தோலிக்க மதம் தங்கள் கடல் வளத்தையும், தொழிலையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் என நம்பி தங்களை இணைத்துக் கொண்டார்களோ, அதே கத்தோலிக்க மதம் அவர்களைச் சுரண்டி விளிம்புநிலைக்குத் தள்ளியது வேறு கதை. இதைப்பற்றி கதை வடிவிலும் ஆழமாகவும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், ஜோ டி குரூஸின் ஆழி சூழ் உலகு, கொற்கை, மற்றும் ராஜம் கிருஷ்ணனின் அலை வாய்க்கரையில் ஆகிய நாவல்களைப் படிக்கலாம்.

கோவாவில் போர்ச்சுகீசியர்களின் வருகை நிகழ்ந்திருக்காவிட்டால், அது ஒரு இஸ்லாமிய மாநிலமாக உருமாறிப் போயிருக்கும் என்பதுவும் நாம் அறிந்ததுதான். பல அரசியல் சூழல்களின் அடிப்படையிலும் தங்களுடைய எதிரிகளாகப் பாவித்துக்கொண்டவர்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்கள் முதல் பல்வேவறு இனக்குழுவினர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கிறார்கள் அல்லது வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த விவாதத்தில் காசுக்காக மதம் மாறுவது எங்கிருந்து வருகிறது என யாரேனும் கேட்கக் கூடும். ஏழை எளிய மக்கள் கோதுமைக்காகவும், ரொட்டித் துண்டுகளுக்காகவும் மதம் மாறிய கதைகள் தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியில் பேசப்படுபவைதான். இன்றும் கூட ஆன்மீகம் என்ற பெயரில் வழிவழியாக தாங்கள் வணங்கிவரும் குல தெய்வங்களையெல்லாம் குப்பையில் வீசிவிட்டு கிறிஸ்தவ மதத்தைத் தழுவுவதற்கு சாதாரண ஜனங்கள் தூண்டில் வீசிப் பிடிக்கப்படுகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மைதானே.

இந்தக் குறிப்பிட்ட காட்சியமைப்பின் உரையாடலில் சாமுவேலாகிப்போன சாமிக்கண்ணு அல்லேலூயா எனக் கோஷம் போடுகிறார். காசுக்காக மனம் மாறிவிட்டதாக அவர் மனைவி ஆத்திரப்படுகிறார். இந்தக் காட்சியிலும் வசனத்திலும் ‘கிறிஸ்தவத்திற்கு எதிரானது’ எனக் குற்றம் கண்டுபிடித்தவர்கள், படத்தின் இறுதிக் காட்சியில் தன் மகள் குத்துச்சண்டையிடும் நேரலைக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் அதே சாமிக்கண்ணு, கையில் ஜெபமாலை மணியை உருட்டியபடி, “என் குழந்தையக் காப்பாத்து இயேசப்பா.” என நெஞ்சுருக வேண்டுகிறாரே. அதைப் பார்க்க மறந்துவிட்டார்களா என்று தெரியவில்லை. திக்கற்றவர்களுக்கு எந்த தெய்வமும் துணை ஆகலாம். தெய்வம் மட்டுமே துணையாக முடியும். பணமோ, பதவியோ, அதிகாரமோ இல்லாத எளிய மக்கள் இறுகப் பற்றிக் கொள்வது தெய்வம் என்ற நம்பிக்கையைத்தான். அது இயேசுவோ, சிவ பெருமானோ, அல்லது முருகனோ. இந்தக் காட்சியில் சாமுவேல் என்ற சாமிக்கண்ணுவோடு சேர்ந்து நம்மையும் மனம்பதைக்க பிரார்த்தனை செய்ய வைக்கும் சுதா கொங்கராவின் நுண்ணிய உணர்வு இதில் அற்புதமாக வெளிப்படுகிறது. பொதுவாகவே கிறிஸ்தவம் பற்றிய சரியான புரிதல் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு இல்லை (மணிரத்தினம் உட்பட) என்பது என் எண்ணம். கிறிஸ்தவத்தின் சில மரபுகளைப் புரிந்துகொண்டு திரைப்படம் எடுத்த ஒரு காலமும் உண்டு. அன்னை வேளாங்கண்ணி என்ற திரைப்படத்தை உருவாக்கிய வேளையில் கத்தோலிக்க மதத்தின் நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைகளுக்கு முரண்பட்டு ஒரு காட்சி கூட அமைந்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்த அப்படக் குழுவினர், மறைந்த பிஷப் தாமஸ் ஃபெர்ணாண்டோ அவர்களிடம் ஆலோசனை கேட்டு சில காட்சிகளில் மாற்றங்களையும் செய்தார்களாம். ஆனால் காலப் போக்கில் தங்கள் புரிதலின்படியே எந்த ஆலோசனையும் இன்றி படம் எடுத்தபொழுது பல குளறுபடிகள் நேரிட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வெள்ளை ரோஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் மூன்று என்ற படத்தில், சிவாஜி கணேசன் கத்தோலிக்கப் பாதிரியாராக வருகிறார். அதில் அவரது மகளாகவே ரஞ்சனி காட்டப்படுகிறார். இறுதியில் அவர் தனது வளர்ப்பு மகள் என்று சொல்லும் இடத்தில், சொந்த மகள் இல்லையா? வளர்ப்பு மகளா என்று நாயகன் ஆச்சரியமாகக் கேட்பது போல காட்சியமைப்பு கோமாளித்தனமாக இடம்பெற்றிருந்தது. உலகெங்கிலும் கத்தோலிக்கப் பாதிரிகளுக்கு திருமணம் செய்துகொள்ள இன்றுவரை அனுமதி இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், இதைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல், படம் முழுக்க அந்த ஊரில் இருக்கின்ற கத்தோலிக்கர்களே பாதிரியாரின் சொந்த மகள் ரஞ்சனி என்று இயல்பாக நினைத்துக் கொண்டிருப்பதாகவே படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அன்றைய நாளில் எந்தக் கேள்வியும் எழவில்லை. ஒருவேளை கத்தோலிக்க மக்களே, ‘அட என்ன பெருசா எடுத்துட்டான், இதுல என்ன இருக்கு?’ என்று நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அது ஒரு மதத்தின் ஒரு அடிப்படையான அம்சத்திலிருந்து முற்றிலும் முரண்பட்டு நிற்கின்ற விஷயம்.

சமீபத்தில் வெளிவந்த 'கடல்' திரைப்படத்தில் கத்தோலிக்க சாமியாராகப் போக விரும்பும் ஒரு இளைஞன் கிறிஸ்தவக் கல்லூரியில் தான் செய்த தவறை மற்றொருவன் காட்டிக் கொடுத்ததால் அங்கிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட, அதற்குக் காரணமான கதாநாயகக் கத்தோலிக்கப் பாதிரியாரைப் பழிவாங்கும் கதை. இப்பொழுதெல்லாம் கத்தோலிக்க சாமியாருக்குப் படிப்பது என்பது அரிதான சிலரைத் தவிர, ஒரு புரொஃபஷனல் கோர்ஸ் படிப்பது போலத்தான் என்பதும் ஒருவேளை அதிலிருந்து வெளியேற்றப்பட்டால் யாரும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்பதும் இயக்குநர் மணிரத்தினத்திற்கு யாரும் சரியாகச் சொல்லவில்லைபோலும்! இறுதிச்சுற்று படத்திலும் இதுபோன்ற கிறிஸ்தவக் குழப்பம் வருகின்றது.

சாமுவேலாகிப்போகும் சாமிக்கண்ணு ‘அல்லேலூயா, அல்லேலூயா’ என்றே சொல்கிறார். பொதுவாக பெந்தேகோஸ்தே சபையைச் சேர்ந்தவர்களே அடிக்கடி அல்லேலூயா, அல்லேலூயா என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். இந்த பெந்தேகோஸ்தே சபையினருக்கும், புரொட்டெஸ்டாண்ட் என்கிற பிரிவினை சபையினருக்கும், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கன்னிமாதா என்று கொண்டாடும் அன்னை மரியும், ஜெப மாலையும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆனால் சாமுவேலோ, மகளைக் காப்பாற்றச் சொல்லி இயேசுவிடம் பிரார்த்திக்கும்பொழுது ஜெப மாலையைக் கையில் வைத்திருக்கிறார். இதையும் கூட பெரிய குறைபாடாக எடுத்துக்கொள்வதற்கு இல்லை.

உலகம் முழுக்க 6000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகளும், அததற்கு என்று வெவ்வேறு நடைமுறைகளும் இருக்க, கிறிஸ்தவர்களே குழம்பிவிடும் நிலையில், இதுபோன்ற வேறுபாடுகளை சுதா கொங்கரா எங்கிருந்து அறிந்துகொள்ள முடியும்? இது கிறிஸ்தவ மதத்தின் குறைபாடே தவிர, இயக்குநரின் குறைபாடில்லை.

இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தனியாகவே ஒரு கட்டுரையாக எழுதலாம். ஆனால், நான் இங்கு சொல்ல விரும்புவது வேறொன்று.

ஆண்கள் பல காலம் கோலோச்சிவரும் திரைப்படத் துறையில் ஒரு பெண் இயக்குநரின், பெண்களுக்கு உத்வேகம் தரும் விதத்தில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் இருக்கின்ற பல நல்ல அம்சங்களையெல்லாம் விட்டுவிட்டு தேடித்தேடி குறை கண்டுபிடிப்பதுபோல் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான படம் என்று எப்படிச் சொல்ல முடிகிறது?

அடிமட்டத்திலிருந்து வரும் பெண்கள் தங்கள் உடலைக் குறிவைத்துத் தாக்கப்படும் சூழலில் இருந்தெல்லாம் கிளர்ந்தெழுந்து சவால்களைச் சந்திப்பதும், வெற்றி பெறுவதும் சாத்தியமான ஒன்று என்ற கருத்தை முன்வைத்து எடுக்கப்பட்ட படம் இது. குறிப்பாகப் பெண்கள் அவ்வளவாகப் பிரவேசித்திராத குத்துச்சண்டை போன்ற துறைகளில் கூட பொருளாதார வசதியற்ற நிலையிலிருக்கும் பெண்களும், முயன்றால் சாதிக்கலாம் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் சுதா கொங்கரா.

மங்கோலிய மன்னன் செங்கிஸ் கான் வரலாறு படிக்கின்ற மாணவர்களுக்கு ஒரு அதீத கனவு நாயகன். தன்னிடம் இருக்கும் பலவீனத்தையே பலமாக மாற்றி எதிரியை வீழ்த்தும் அவனது திறனும் உத்தியும் இந்தப் படத்தில் மிகப் பொருத்தமாக எடுத்தாளப்பட்டுள்ளது. வரலாறு என்ற பாடமே பள்ளி, கல்லூரிகளிலிருந்தும், மக்களிடமிருந்தும் மறைந்துகொண்டிருக்கும் சூழலில் மறக்கப்பட்ட ஒரு வரலாற்று நாயகனை எதிரிகளைத் தோற்கடிக்கும் அவனது யுக்தியைக் கொண்டாடுவதன் மூலம் கொஞ்சமேனும் வரலாற்று ஆர்வத்தை இந்தப் படம் தூண்டிவிட்டிருக்கும் என்றால் அது பெரும் சாதனையே.

பெண்களின் மனது, உணர்வு, ஆன்மா எதையும் பொருட்படுத்தாது உடலை உடைமையாக்கத் துடிக்கும் ஆண்களுக்கு மத்தியில் வாழ்க்கையில் தோற்றுப்போனவராய் ஆவேசம் கொண்டு அலைந்தாலும், ஒரு மீனவக் குப்பத்துப் பெண்ணைத் தன் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் நாயகியாக உயர்த்தும் கதாப்பாத்திரத்தில் மாதவன் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்! இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் நம்முடன் நேரடியாகப் பேசுகின்றன. நம்மை உலுக்கி எழுப்புகின்றன.

கேமராவும், இசையும் பலம் சேர்த்திருக்கின்றன. மொத்தத்தில் நடிகர்களின் கடுமையான உழைப்பில் ஒரு திறமையான இயக்குநரின் தெளிவான படம்.


வழக்கமான ஆண்-பெண் மோதல், காதல், கலாட்டா, நம்பமுடியாத சண்டைக் காட்சிகள், நாயக வழிபாடு போன்ற மசாலாக்கள் இடம்பெற்றிருக்கும் தமிழ்ப் படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கும் பாராட்டப்பட வேண்டிய படத்தை, கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என்று குறை கண்டுபிடிக்கும் நண்பர்கள் அதிகார மமதையில் சாதிய துவேஷம் கொண்டு பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் செய்து, அல்லது அதற்குத் துணையாக நின்று கோர முகம் காட்டும் சில கத்தோலிக்க கார்ப்பரேட் நிறுவனங்களைக் கேள்விக்குட்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவது சமுதாயத்திற்கு நலம் பயக்கும்.


திங்கள், 18 ஜனவரி, 2016

ஒரு கிராமத்து நதி

ஒரு கிராமத்து நதி 

அடிப்படையில் வரலாற்று மாணவி நான் .இங்கிலாந்து வரலாறும் பிரெஞ்சு தேசத்து வரலாறும் பிடித்தமானவை .அதனாலேயே 2006 ஆம் ஆண்டு பாரீஸ் நகருக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்த போது வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம் .நம்ம பூலோக கற்பக விருட்சமான பனை மரத்தைப் பேணுவதற்காக மாணவருடன் சேர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தின் சில கிராமங்களில் செயல் படுத்திய திட்டம் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்ததால் 40 க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட போட்டியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தோம்.முதல் இரு நாட்கள் சுற்றிப் பார்க்க நேரம் கிடைத்தது .ஈபிள் கோபுரத்தின் கம்பீரம் இன்னும் கூட நெஞ்சில் நிமிர்ந்து நிற்கிறது .அங்கும் கூட நம்மூரைப் போலவே சிலர் குறிப்பாகப் பெண்கள் அச்சடிக்கப் பட்ட காகிதத்தைக் கையில் கொடுத்து வேறு நாட்டிலிருந்து வந்தோம்  திரும்பிச் செல்ல பணம் இல்லை உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். உலகம் பல விஷயங்களில் உருண்டைதான் போலும் !

நெப்போலியன் ஆரம்பித்து வைத்து அவன் எல்பா சிறையில் மாண்டு பல வருடங்களுக்குப் பிறகு கட்டி முடிக்கப் பட்ட' வெற்றி வளைவு' போரில் மடிந்து போன  ' பல்லாயிரக்கணக்கான வீரர்களின் வீரத்திற்கு மட்டும் அல்லாமல் நெப்போலியனின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் கூட சான்றாக நிற்கிறது . அந்த நகரத்தில் என்னை அதிகம் கவர்ந்தது பாரீஸ்  நகரைச் சுற்றிப் பாம்பு போல வளைந்தோடும் ஸீன்  நதிதான் .புனிதம் என்ற பொருள் கொண்ட அந்த நதி  மாசற்ற குழந்தையின் முகம் போல உயிர் தொடும் தூய்மையுடன் ததும்பிச் செல்கிறது .அதில் படகுச் சவாரி செல்ல வாய்ப்புக் கிடைக்கவில்லை .நதியின்  அழகைப் பார்த்தபடி நின்றிருந்த அந்த  அற்புதக் கணத்தில் உடன் நின்றிருந்த மாணவி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்  அவர்களின் 'ஒரு கிராமத்து நதி' கவிதைத் தொகுப்பு பற்றிப் பேசத் தொடங்கினாள். 

என்னிடம் படித்த மாணவ மாணவியரில் கவிதை எழுதும் திறன் கொண்டவர்களின் ஆற்றலை வெளிக் கொணர, அவர்கள் எழுதிய கவிதைகளைத் தொகுத்து, புத்தகமாக வெளியிடும் முயற்சியில் இறங்கிய போது தமிழின் முக்கியமான கவி ஆளுமைகளின் கவிதைத் தொகுப்புகளைப் படிக்கச்  செய்தேன் .வகுப்புகளில் திறனாய்வு செய்யவும் வைத்தேன் .அப்போது அதிகமாக வாசிக்கப் பட்டதும் விவாதிக்கப் பட்டதும் 'ஒரு கிராமத்து நதி' .வானம்பாடி இயக்கத்தின் மிக முக்கிய முன்னோடியான சிற்பி அவர்களின் பொது உடைமைச் சித்தாந்தக் கவிதைகளிலிருந்து இத் தொகுப்பு வித்தியாசப் பட்டிருப்பதாக நானும் உணர்ந்திருக்கிறேன் .படிமங்கள் பல பயின்று வந்திருக்கும்  'ஒரு கிராமத்து நதி ' வாசிக்க வாசிக்க வேறு வேறு தளங்களுக்குள் நம்மை இட்டுச் செல்பவை .அதனால்தான் 'கனல் மணக்கும் பூக்கள்' என்ற தலைப்பில் மாணவர்களின் கவிதைத் தொகுப்பு வெளி வந்த பிறகும் 'ஒரு கிராமத்து நதி 'யின் கவியொலி எங்கள் மனதில் நீங்காதிருந்தது .

ஸீன் நதியின் தூய்மையில்,மனிதர்களின் பேராசையாலும் அலட்சியத்தாலும் மொட்டையக்கப் பட்டு மூளியாகிப் போன  நம்  தமிழ் நாட்டுக் கிராமத்து நதிகளின் கையறு நிலையும் கலங்கலாகத் தெரிந்தது .வெகு நேரம் கழித்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்லும் போது வழி தவறி ரயில் நிலையத்தில் அலை மோதினோம்.பிரான்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் திருமூலரும் தெரிதாவும் பற்றி முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த என் சகோதரர் நிஷாந்த் இருதயதாசன் விடுமுறைக்காக அப்போது லண்டன் சென்றிருந்தார் .அடிப்படையில் பிரெஞ்ச்சுக்காரர்கள் மனித நேயம் மிகுந்தவர்கள் .ஆனால் அப்போது லண்டனில் liquid bomb மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடை பெற்றிருந்ததால் நட்பு பாராட்டுதலோ உதவியோ அவர்களிடமிருந்து எதிர் பார்க்க முடியாது என்று சொல்லியிருந்ததுடன்  அங்கிருந்த தமிழ் நாட்டு நண்பர்கள் சிலரையும் அறிமுகம் செய்திருந்தார் .ரோமிங் வசதி பெறாததால் அவர்களை எங்களிடமிருந்த கைப் பேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.வேற்று கிரக வாசிகள் போலத் திகைத்து நின்ற போதுதான் அந்த மாணவி 'ஒரு கிராமத்து நதி 'என்று கத்தினாள்.பயத்தில் மூளை குழம்பி விட்டதோ என்று நான் மிரண்டுதான் போனேன் .  அவள் சுட்டு விரல் நீண்ட திசையில் ஒரு மனிதர் முகத்தில் தமிழர் என்ற அடையாளம் .அவர் கையில் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின்  'ஒரு கிராமத்து நதி '!

அவருக்கு அருகில் நம்ம ஊர் செவ்வந்திப் பூ சூடியிருந்த அவர் மனைவி .
பக்கத்தில் சென்று பேசுவதறியாது நின்ற வேளையில் என் மாணவிதான் ஆரம்பித்தாள்  .சார் ...இந்தக் கிராமத்து நதி ..என்று .அவர் உற்சாகமாகி விட்டார் .அவர் காரைக்காலைச் சேர்ந்தவர் என்றும் ஊருக்குச் சென்றிருந்த போது ஒரு கிராமத்து நதியினை வாங்கி வந்ததாகவும் வாசிக்கும் தோறும் மண் வாசனையில் மகிழ்வதாகவும் சிலாகித்தார் .பேச்சின் ஊடாக எங்கள் நிலையறிந்தவர் உடனே அவர் கை பேசியில் தேவையான எண்களைத் தொடர்பு கொண்டு  பேசச் செய்தார் .லண்டனிலிருந்த என் சகோதரரரிடமும் என்னைப் பேச  வைத்து எனக்கு உற்சாகமூட்டினார் .மொத்தத்தில் திசை தெரியாது தவித்துக் கொண்டிருந்த எங்களைக் கரை சேர்த்தது அன்று சிற்பி அவர்களின் கிராமத்து நதிதான்.

பரந்து விரிந்த உலகத்தில் தேசம் கடந்தும் மனிதர்களை இலக்கியம் இணைக்க முடியும் என்று  நாங்கள் உணர்ந்த தருணம்அது. உலக அளவில் 1500 பல்கலைக்கழகங்களில் மூன்றாம் இடத்தை  வென்று இந்தியாவுக்குத் திரும்பியதும் நான் என் அம்மாவுடன் சென்றது முத்தாலங்குறிச்சி ஊருக்குத்தான். .தாமிரபரணிக் கரையோரம் அமைந்திருந்த அந்தச் சிற்றூரில்தான் என் குழந்தைப் பருவம் விசித்திரக்  கனவுகளில், கட்டற்ற விளையாட்டில்  கனிந்தது .ஒரு ஆசிரியர் தன்னிடம் பயிலும் ஒவ்வொரு மாணவரையும் சொந்தக் குழந்தையாகவே எண்ணி அறிவிலும் பண்பிலும் வளர்க்க வேண்டும் என்பதை ஆசிரியர்களாயிருந்த என்  அப்பாவும் அம்மாவும் அந்த ஊரில்தான் வாழ்ந்து காட்டினார்கள் .ஊரை வளைத்துச் சென்ற அந்த தாமிரபரணியில்தான் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டு மறு ஜென்மம் எடுத்தேன்.

நதிக்கரையில்தான் நாகரிகம் வளர்ந்ததாகப் படிக்கிறோம் .ஒவ்வொரு பொங்கலின்  போதும் மாட்டுப் பொங்கல் அன்று மாலையில் பனங்கிழங்கு,கரும்பு போன்றவற்றை எடுத்துக் கொண்டு  முத்தாலங்குறிச்சி ஆற்றங்கரையில்,ஊர் காவலாய் வீற்றிருக்கும் அம்மன் கோவில் அருகில்  விழுதுகளும் கிளைகளும் பரப்பி உயர்ந்து நிற்கும் ஆலமரத்தினடியில், பறவைகளின் சங்கீதம் கேட்டபடி, ஊர் மொத்தமும் பகிர்ந்து உண்டு சிரித்து மகிழ்ந்ததில் பங்கெடுத்த நினைவுகள் இன்றும் பசுமையாய்!ஆற்றில் நீர் வற்றும் காலங்களில் மணலில் ஊற்று தோண்டி சின்னச் செப்புக் குடத்தில் தேங்காய்ச் சிரட்டையால் நீர் மொண்டு  ஊற்றி உடுத்தியிருந்த துணி தண்ணீராலும் மண்ணாலும் நிறைந்திருக்க நட்பு வட்டத்துடன் கதை பேசிச் சென்றதும்  அதே ஆற்றங் கரையோரம் குலை குலையா  முந்திரிக்காய் விளையாடியதும் மீண்டும் மீண்டும் அந்தக் கணங்களில் இன்றும் வாழ முடிகிறது .இன்று வரை என்னோடு பயணிக்கின்ற  அந்தத் தவிர்க்க முடியாத நினைவுகளினால்தான் என்னுடைய நாவல்கள் பரணி, சங்கவை   இரண்டிலும் நான் முத்தாலங்குறிச்சி என்ற ஊர் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறேன் .

அகன்று ஓடிய அந்த அழகான துய்மையான குடிநீராகவும் விவசாயிகளின் பயிருக்குப்  பசுமை நீராகவும் பயன் தந்த அந்த நதி நான் பிரான்சிலிருந்து திரும்பி வந்ததும்  சிற்பியின் கவிதை கிளர்ந்து விட்ட நினைவுகளால் அங்கு சென்று பார்த்த போது முது மக்கள் தாழியில் குறுகிப் போன ஜீவனற்ற உடம்பு போலத்  தோன்றியது .லாரியில் யார் யாரோ மணல் அள்ளிக் கொண்டிருந்தார்கள் .வெற்றிலைக் கொடிக் காலும் நெற்கதிர் கழனியும் தொலைந்து போன கனவுகளாய் ,செங்கல் சூளைக்காக வெட்டப்பட்ட பனை மரங்களின் சுவடு கூட இல்லாமல் ,இயற்கை அந்த ஊரிலிருந்து ரொம்ப தூரம் காணாமல் போயிருந்தது .

நதிகளை இழந்தால் நாகரிகம் ,பண்பாடு ,மனிதம் என்று எல்லாவற்றையும் இழந்து விடுவோம் .பொங்கல் நாளிலும் சிற்பியின் 'ஒரு கிராமத்து நதி 'தான் என் நினைவில் ,முத்தாலங் குறிச்சி ஆற்றினைப் பற்றிய ஆற்றாமையுடன்!

வெள்ளி, 15 ஜனவரி, 2016

சபரிமலையும் பெண்களும்

ரிக் வேதமும் அர்னாப் கோஸ்வாமியும் 



10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்பது பற்றிய சர்ச்சை, வழக்கு, விவகாரம் சமீபத்தில் Times Now தொலைக்காட்சியில் விவாதிக்கப்பட்டது. அதென்னமோ தெரியவில்லை. பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றாலே நடிகையரும், அரசியலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் மட்டுமே இதுபோன்ற விவாதங்களில் கலந்துகொள்ள தொலைக்காட்சிகள் இடம் தருகின்றன. விவாதத்தில் பங்கெடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு சபரிமலை தேவ ஸ்தானத்தின் சார்பாக பெண்கள் ஐயப்பன் சந்நிதானத்திற்குள் செல்லும் தடையை நியாயப்படுத்திப் பேசியவரிடம் உங்களைப் பெற்றது தாய்தானே, மனிதர்களைப் பெற்றெடுப்பதும் பெண்தானே, ஏன் அந்த சந்நிதானத்தில் இருக்கின்ற சாமியைப் பெற்றெடுப்பதும் பெண்தானே என்றெல்லாம் பழைய வழக்கினையே பேசிக்கொண்டிருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், சுவாமி ஐயப்பன் மோகினியாக உருவெடுத்த திருமால் என்ற ஆண் கடவுளுக்கும், சிவன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்தவர் என்பதுதான் ஐதீகம்.


பொதுவாகவே, கடவுள் அவதாரங்களின் பிறப்பு இயற்கையானது இல்லை என்பது வேறு விஷயம். நம்மூர் மதுரை மீனாட்சியம்மனே கருவறையில்லாமல் பிறந்தவர் என்பதுதான் நம்பிக்கை. கிறிஸ்தவ கடவுளான இயேசுவின் பிறப்பு கூட இயற்கைக்கு அப்பாற்பட்டதாகவே விவிலியத்தில் சொல்லப்படுகிறது. எனவே, கடவுள் அவதாரங்களின் தாய்மார்கள் பற்றி தர்க்கம் அபத்தமானதுதான். இது ஒருபுறம் இருக்கட்டும்.

தேவ ஸ்தானத்தைச் சேர்ந்தவரும் இன்னும் ஒரு பண்டிட்டும், சுவாமி ஐயப்பன் பிரம்மச்சர்ய கடவுள் என்பதால் பெண்களுக்கு அங்கு அனுமதி இல்லை என்பதையும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க, எதிர் வழக்காடிய பெண்களோ, மாதவிடாய் பிரச்சினைதானே அதற்கு முன் வைக்கிறீர்கள். அதனால் பெண்கள் தூய்மையற்றவர்களாய்ப் போகிறார்களா எனக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்து மதத்தில் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் எந்தக் கோவிலுக்குமே பெண்கள் செல்வதில்லை என்பது எழுதப்படாத சட்டமாக எவ்வளவோ தலைமுறைகள் இருந்து வருவது இவர்களுக்குத் தெரியாதா?

இந்து மதத்தில் மட்டுமல்ல. கிறிஸ்தவ மதத்திலும் கூட அந்தக் காரணத்தினாலேயே பெண்கள் குருக்களாக நியமிக்கப்படுவதில்லை என்பதுவும், அதனைப் பல பெண் எழுத்தாளர்கள் கடுமையாக விமரிசனம் செய்து இலக்கியத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதையும் காண முடிகிறது.

Gabriele Dietrich என்ற ஆங்கில கவிஞர், கத்தோலிக்க பாதிரிகளுக்கு இவ்வாறு அறைகூவல் விடுக்கிறார்:

I am a woman
and the blood
of my sacrifices
cries out to the sky
which you call heaven.
I am sick of you priests
who have never bled
and yet say:
This is my body
given up for you
and my blood
shed for you
drink it.
Whose blood
has been shed
for life
since eternity?
I am sick of you priests…

எனவே, பெண்ணின் மாதவிடாய் அவளைத் தீண்டத்தகாதவளாக கோவில்களிலும் தேவாலயங்களிலும் ஒதுக்கி வைக்கிறது, கிறிஸ்தவ மதத்திலும் கூட.

என்னுடைய கேள்வி இதுதான். ஒரு குறிப்பிட்டக் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதால் மட்டும் பெண்களுக்கு சமமான உரிமை கிடைத்துவிடுகிறதா? Times Now விவாதத்தின்பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாக இருக்க, கோவிலுக்குள் மட்டும் பெண்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது.

ரொம்ப சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் HumHindu.Com-ன் பண்டிட்ஜியைப் பார்த்து ரிக் வேதம் ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்கிறதே. நீங்கள் ரிக் வேதத்தைவிட மேலானவரா என்று அர்ணாப் கோஸ்வாமி ரிக் வேதத்திலிருந்து சில பகுதிகளை உருவி உச்ச ஸ்தாயியில் முழங்கிக் கொண்டிருந்தார். அவருடைய வாதம்தான் என்ன? ரிக் வேதம்தான் இந்திய மக்களின், ஆண், பெண் வாழ்வியலைத் தீர்மானிக்கும் மேலான சக்தி என்கிறாரா. ரிக் வேதத்திற்குப் பிற்பட்ட சாம அதர்வண வேதங்கள், கைம்மை, குழந்தைத் திருமணம் - இவற்றையெல்லாம் ஆதரிக்கிறதே... அவையும் மேலானவை என அவர் சொல்வாரா?

சமீபத்தில் பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் இந்தியாவை ஒற்றைப் பண்பாடு, ஒற்றைப் பெருமதம் நோக்கி வெகு சிலர் காய்கள் நகர்த்துவதாக தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள், பழங்குடியினர் அவர்தம் வழிபாடு நம்பிக்கைகள் - இவற்றைப் புறந்தள்ளி ஒற்றைப் புள்ளியை நோக்கி நகர்த்தும் அந்த ஆபத்தான முயற்சியின் வெளிப்பாடாகவே ரிக் வேதத்தைவிட நீங்கள் மேலானவரா என்ற அர்ணாப் கோஸ்வாமியின் கேள்வியை அவதானிக்க வேண்டியிருக்கிறது. ஜீவாதாரத்திற்கு வழியில்லாமல் உழைப்பு உறிஞ்சப்பட்டு பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் அடித்தட்டுப் பெண்களுக்கு இந்தப் பெருங் கோவில்களுக்குள் செல்வது பற்றிய எந்த அக்கறையும் இருக்கப்போவதுமில்லை, அது அவர்களுக்குத் தேவையுமில்லை. தொலைக்காட்சிகளின் விவாத மேடையில் சாதாரண உழைக்கும் பெண்கள் எப்பொழுது குரல் கொடுக்க அனுமதிக்கப்படுகிறார்களோ, அதுதான் உண்மையான பெண்ணியமாகவும், கருத்துச் சுதந்திரமாகவும் அமையும்.

2001-ஆம் ஆண்டில் நான் எழுதிய பரணி என்ற நாவலில் மாதவிடாய் சமயங்களில் கோவில்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படாது விசித்திரத் தீண்டாமைக்குப் பழக்கப்படுத்தப்படுகின்ற மேல்சாதிப் பெண்களைக் காட்டிலும், எப்பொழுதுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத தலித் பெண்களின் நிலை மேலானது என்ற வரிகளை இங்கு நினைவு கூறுகிறேன்.