திங்கள், 28 மார்ச், 2016

'தலித் எழுத்தாளர்' அடையாளம் என்ற தீண்டாமை

'தலித்  எழுத்தாளர்' அடையாளம் என்ற தீண்டாமை


கொடிய  தீண்டாமையின்  நெடிய வரலாறு  பற்றிய எந்தப் புரிதலும் இல்லாதவர் போல பாரதீய 
ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் அவர்கள் வர்ணாசிரமம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்கு எழுத்தாளர் ‪#‎இமையம்‬ அவர்களின் மறுப்பும் கருத்தும் இன்றைய 'The Hindu' ஆங்கில நாளிதழில் வெளி வந்துள்ளது . வர்ணாசிரமம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்கு எழுத்தாளர் ‪#‎இமையம்‬ அவர்களின் மறுப்பும் கருத்தும் இன்றைய 'The Hindu' ஆங்கில நாளிதழில் வெளி வந்துள்ளது.சாதீயம்,பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என சமூகப் பிரச்சினைகள் பற்றி தனது கலாபூர்வமான படைப்புக்களின் வழியாக நம்மிடம் தொடர்ந்து உரையாடி வரும் திரு #இமையம் சுருக்கமாகவும்செறிவாகவும் தனது மறுப்பினைப் பதிவு செய்துள்ளார்.தனது கருத்துக்கு அரணாக அயோத்தி தாஸ் பண்டிதரின் சிந்தனையையும் பகிர்ந்து கொண்டுள்ளார் 


.சாதீயம் பற்றிய இல கணேசனின் கருத்துக்கு 'தலித் அறிவுஜீவிகளின் ' எதிர்வினை என்ற வாசகத்துடன் இமையம் அவர்களின் கருத்து பிரசுரிக்கப் பட்டுள்ளது .ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆணவக் கொலைகளாக அதிகரித்து வரும் இன்றைய சூழலில் சாதிக் கொடுமைகள் பற்றி எழுதுவது சிந்தனையாளர்கள் மற்றும் ,படைப்பாளிகளின்  {அவர்கள்  எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் } கடமையாகிறது.அந்தக் கடமையைச் சரியாகச் செய்கிறார் என்பதற்காகவே எழுத்தாளர் #இமையம் அவர்களை 'தலித்எழுத்தாளர்' 'தலித்அறிவுஜீவி' என்று ஒரு வட்டத்துக்குள் அடையாளப் படுத்துவது எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை. சாதீயத்துக்கு எதிரான வெறும்'பரப்புரையாக' இல்லாமல் சிறந்த கலைப் படைப்புக்களாக நிலைத்து நிற்பவை அவரது நாவல்களும் சிறுகதைகளும் நாடகங்களும்!  

தலித்துகள் பற்றி எழுதுவதனால் ஒருவரை தலித் எழுத்தாளர் என்று இங்கு அடையாளப் படுத்துவதில்லை.எழுதுபவர் தலித்இனத்தவர் என்றால் மட்டுமே இப்படி அடைமொழி கொடுத்து அழைக்கப் படுகிறார்.பெண்களின் உலகம் ,அவர்களின் வலி ,தாராளமயமாக்கலில் சந்தைப் படுத்தப் பட்டு விட்டகல்வி என்று பல விஷயங்களை எழுதி வரும் இமையம் அவர்கள் இந்த அடையாளங்களுக்குள் அடைபட வேண்டியவர் இல்லைஎன்பது என்னுடைய கருத்து.

ஒரு சந்தேகம் !

நமது சமூகத்தில் யாரேனும் 'நாடார் எழுத்தாளர்' 'பிள்ளைமார் எழுத்தாளர்' 'மீனவ எழுத்தாளர்' அல்லது 'பிற்படுத்தப் பட்ட இனத்து எழுத்தாளர்'  அல்லது 'மிகவும்
பிற்படுத்தப் பட்ட இனத்து எழுத்தாளர்' என்று அடைமொழி கொடுத்து அடையாளப் படுத்தப் பட்டிருக்கிறார்களா?

தலித் மக்களின் வாழ்வையும் கண்ணீரையும் ,பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப் பட்டவர்களாக ,ஒதுக்கப் பட்டு வாழும் அந்த விளிம்பு நிலை மக்களின் அவலங்களையும்  பதிவு செய்யும் ஒரு படைப்பாளி தலித் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரை  ,"தலித் எழுத்தாளர் என்று அழைப்பதும் தீண்டாமையே 

வெள்ளி, 25 மார்ச், 2016

கிங்' விஜயகாந்த் குடும்பத்தாரின் தமிழ்ப் பற்று ?

'கிங்' விஜயகாந்த் குடும்பத்தாரின் தமிழ்ப் பற்று ?

தமிழகத்தை வாழ வைக்க இனி விஜயகாந்தை விட்டால் ஆளில்லை ,நாதியற்றுப் போன தமிழர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் பவர் ஸ்டார் [அட நடிப்புல பவருங்கோ} விஜயகாந்த் என்று அவரை முதலமைச்சர் வேட்பாளராக்கி விட்டார்கள் மக்கள் நலக் கூட்டணியினர் .ஒரு சமூகத்தின் தலைவனாக வர விரும்புபவன் அந்த மண் சார்ந்தவனாகவும் மக்களில் ஒருவனாகவும் இருக்க வேண்டும் .அந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பவனாக ,அந்த மக்களின் நலன் நாடுபவனாகவும் இருக்க வேண்டும் .அந்த மண்ணின் மொழியையும் பாதுகாப்பவனாக இருக்க வேண்டும் .ஏனென்றால் ஒரு சமூகத்தை ,ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் ஆயுதம் ஏந்தத் தேவையில்லை ! அந்த இனத்தின் தாய் மொழியினை அழித்தாலே போதும் !அவர்கள் அடையாளாம் இழந்து அழிந்து போவார்கள் .ஏனென்றால் தாய் மொழி என்பது ஒரு இனத்தின் வாழ்வு நெறிகளின் ,பண்பாட்டின் ,கலாச்சாரத்தின் அடையாளம் !

எதற்கு இவ்வளவு பீடிகை என்று யோசிக்கிறீர்களா ?கிங் விஜயகாந்த் தெலுங்கர் என்றாலும் தமிழை நேசிப்பவர் என்ற ஒரு எண்ணம் இங்கு நிலவுகிறது .தமிழ் எனது மூச்சு தமிழ் எனது பேச்சு அதுவே எனது வாட்ச்சு என்று சினிமாவில் பூச்சாண்டி போல் கண்களை உருட்டிப் பேசியவராயிற்றே !
அது எவ்வளவு பெரிய பொய் ! சென்னையின் பிரபலமான கல்லூரியில் தமிழ்த் துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம் ! தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களுக்காக அடிப்படைத் தமிழ் வகுப்பு  நடத்தப் படும் ,.பல்கலைக் கழக உத்தரவின் பேரில் நடைபெறும் இந்த வகுப்புக்களில் பங்கெடுத்து ,தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டதாரியாக முடியும் .பெரும்பாலும் மணிப்பூர் ,நாகலாந்து ,ஆந்திரா ,கேரளா கல்கத்தா போன்ற மாநிலங்களிலிருந்தும்  வெளி நாடுகளிலிருந்தும் வந்து படிக்கும் மாணவர்கள் இதில்  பங்கெடுப்பார்கள் ,

அ னா ஆவன்னா விலிருந்து தொடங்கி உயிர், மெய், உயிர்மெய் எழுத்து,எனத் தொடர்ந்து பிறகு அணில், ஆடு ,காய் கனிகள் என்று சொல்லிக் கொடுப்பதற்குள் ஆசிரியருக்குத் தாவு தீர்ந்து விடும்  .ஒரே வகுப்பில் ஒரே நேரத்தில் 60 க்கும் மேற்பட்ட பலதுறை பயிலும்  மாணவ மாணவியருக்குத் தனித் தனியாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும் .  பெரும்பாலும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும்  கேரளாவிலிருந்து வந்து படிக்கும் மாணவ மாணவியரும் தேர்வுக்காக என்று இல்லாமல் ஆர்வத்துடனேயே கற்றுக் கொள்வதைக் கவனித்திருக்கிறேன்.

ஒரு நாள் அந்த வகுப்பில் கையில் பாடப் புத்தகமோ எழுதுவதற்கு நோட்டோ எதுவும் இல்லாமல்  ஒரு மாணவன் முன் வரிசையில் அமர்ந்து பேசிக் கொண்டும்  மற்றவர்களையும் எழுத விடாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன் .அவனை அது வரையில் அந்த அடிப்படைத் தமிழ் வகுப்பில் நான் பார்த்ததேயில்லை . விசாரித்த   போது பெயர் சண்முக பாண்டியன் என்பதும் அவன் கல்லூரிக்கே ஒழுங்காக வருவதில்லை எனவும் தெரிந்தது .இனி தவறாது வகுப்புக்கு வருவதாகச் சொன்னவன்  முந்தைய நாளைப் போலவே நோட்டுப் புத்தகம் எதுவும் இன்றி வந்து  சள சளவென்று பேசிக் கொண்டிருந்தான் .அவனுடைய நோட்டு எங்கே எனக் கேட்டதும் பக்கத்திலிருந்தவனின் நோட்டுப் புத்தகத்தைப் பிடுங்கி தன்னுடையது என்று காட்டிச் சாதித்தான் .

அவனுக்கு என்னதான் பிரச்சினை என்று கேட்டேன் .தனக்குத் தாய்மொழி தமிழ் இல்லை என்றான் .அப்படிப் பட்டவர்களுக்காகத் தான் இந்த வகுப்பு ,ஆப்பிரிக்க தேசத்து மாணவர்கள் கூட ஆர்வத்துடன் படிக்கிறார்கள் என்றதும் "இதப் படிக்கலேன்னா     என்ன பிரச்சினை "எனக் கேட்டான் .டிகிரி வாங்க முடியாது என்றேன் என்னால் கண்டிப்பாகத் தமிழ் படிக்க முடியாது  .விதி விலக்கு வாங்க முடியுமா என்று கேட்டான் ஏதோ தோஷத்துக்குப்  பரிகாரம் உண்டா என்பது போல !விதி விலக்கு உண்டு  சில மாற்றுத் திறனாளிகள்  குறிப்பாகப் பார்வையற்றோர் விலக்கு பெறமுடியும் என்பதைத் தெரிவித்தேன் .சரியான மூளை வளர்ச்சி இல்லாமல் படிக்க வரும் மாணவர்களுக்கும்  மொழிப் பாடத்திலிருந்து பல்கலைக் கழகத்தால் விதி விலக்கு வழங்கப் படும் என விளக்கினேன் .பலத்த யோசனையுடன் சென்றான் .


மீண்டும் சில நாட்கள் அவனை வகுப்பில் காணவில்லை .விசாரித்த பொழுது "அவன்  எப்பொழுதும் இப்படித்தான் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 மதிப் பெண்களுக்கும் குறைவா வாங்கியிருந்தான் .நல்லா படிக்கிற யாருக்காவது அந்த சீட் ஐக் கொடுத்திருந்தால் பிரயோஜனமாயிருந்திருக்கும்  என்று மாணவர்கள் அலுத்துக் கொண்டார்கள் 1150 மதிப்பெண் பெற்ற படைப் பூக்கமும் ஆர்வமும் கொண்ட  பல ஏழை மாணவர்களுக்கே அக் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்   துறையில் இடம் கிடைக்காத போது இப்படிப் பட்ட மாணவனுக்கு எப்படிக்  கிடைத்தது ?
நான் திகைத்துப் போய் நின்றிருக்க ,அவன் விஜயகாந்தின்   மகன். .முதலில் அவனுக்கு சீட் தரமுடியாது என்றுதான் மறுக்கப் பட்டது .சட்ட மன்ற எதிர்க் கட்சித் தலைவர் மகனுக்கே இடம் தர முடியாதா?  என்று விஜயகாந்த் நேரில் வந்து சண்டை போட்டு வாங்கினாராம்  என்றார்கள் மாணவர்கள் .அரசல் புரசலாகக் கேள்விப் பட்டிருந்த விஷயம்தான் .ஆனால் அயர்ச்சியாக இருந்தது ,

நீண்ட இடைவெளிக்குப் பின் கிங் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் என்னை வகுப்பில் வந்து சந்தித்தான் .முகத்தில் விடுதலை உணர்வும் சந்தோஷமும்  ஆர்ப்பரித்தன .கையில் வைத்திருந்த பேப்பரைக்  கொடுத்தான் தான் மொழிப் பாடம் அதாவது அ ,ஆ என அடிப்படைத் தமிழ் கூடப் படிக்கத் தேவையில்லை என்று பல்கலைக் கழகத்திலிருந்து விலக்கு வாங்கி விட்டதாகக் கூறினான்  ."எப்படி விலக்கு வாங்கினாய் ?உடலில் ஊனம் என்றா ??அல்லது மூளை வளர்ச்சி குன்றிய மாணவன்? என்றா என நான் அவனிடம் கேட்கவில்லை  .கம்பீரமாகத் திரும்பிச் சென்று கொண்டிருந்த அவனைப் பார்ப்பதற்கே  அருவருப்பாக உணர்ந்தேன் .


அதே அருவருப்பான உணர்வினை கிங் விஜயகாந்த் தமிழக முதல்வருக்கான வேட்பாளர்  என இடது சாரி காம்ரேட்டுகள்  சொன்ன கணத்திலிருந்து உணர்கிறேன் .கிங் விஜகாந்துக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று தானே சொல்லித் திரிகிறார் .அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் தமிழ் மொழியே பிடிக்காது  !அவர்களைப்  பொறுத்த வரை தமிழ் தீண்டத் தகாத மொழி.  எம் மொழி பல்லாயிரம்  ஆண்டுகள் பழமையும் வளமையும் கொண்ட மொழி !அமுதத் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட எங்கள் தமிழ் இனம்  தொன்மையான நாகரிகமும் பண்பாடும் கொண்ட மாண்புயர் இனம் !
எங்கள் மொழியினை வெறுக்கும் ஒரு மனிதன் ,திரைப் பட நடிகன் {அதுவும் லாஜிக் எதுவும் இல்லாத மசாலாத்திரைப்படம்}  என்பதைத் தவிர எந்த அடையாளமும் இல்லாத ஒருவர் எம் மண்ணையும் மக்களையும்
ஆளத்  துடிப்பது எங்கனம்?எம் தமிழ் மொழியை வெறுப்பவர் எம் மண்ணில் வாழ்வதற்கே தகுதியற்றவர்  .இதனை இடது சாரி அறிவு ஜீவிகள்  உனராமலிருக்கலாம் .ஆனால் எம் மக்கள் ஏமாளிகள் இல்லை .அதனைத் தேர்தல் முடிவுகள் சொல்லும் 

ஞாயிறு, 13 மார்ச், 2016

பேராசிரியர் அருணன் அபத்தங்களின் அவதாரம் பாகம் 1

பேராசிரியர் அருணன் அபத்தங்களின் அவதாரம் பாகம் 1

தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது .வாக்காளப் பெருமக்களைக் குழப்பி முட்டாளாக்க முனையும் வேலையில் சி.பி.எம் கட்சியினைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் போன்றவர்களின் தொலைக்காட்சி விவாதக் கோமாளித்தனங்களையும் ,எதிராளியைப் பேச விடாது கத்திக் குதறும் பண்பாடற்ற செயல்களையும் கண்டு சின்ன வயது பூச்சாண்டி பிம்பங்கள் வந்து பயமுறுத்துகின்றன .இதையெல்லாம் கூடத் தாங்கிக் கொள்ளலாம் போலத் தெரிகிறது .மெத்தப் படித்த பேராசிரியர் அருணன் அவிழ்த்து விடும் பொய்களைக் கேட்டு ,சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் என்று மனம் குமுறுகிறது .

சில நாட்களுக்கு முன்பு 7 நியூஸ் தொலைக் காட்சி விவாதத்தில் 'நாம் தமிழர் கட்சி ' யைச் சேர்ந்த திரு .அறிவுச் செல்வன் என்பவரைப் பேச விடாமல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த பேராசிரியர் அருணன் "நீங்கள் பிராமணியக் கடவுளைத் தூக்கிப் பிடிக்கிறீர்கள் ,முருகப் பெருமானுக்காகப் போராடுகிறீர்கள் ,நீங்கள் இந்து முன்னணியின் மறு பதிப்பு என்று பித்துப் பிடித்தவர் போலக் கத்திக் கொண்டிருந்தார் .தமிழர்களின் மரபு ,கலாச்சாரம் ,பண்பாடு ,நெடிய வரலாறு இவை பற்றியும் அதில் குறிஞ்சி மலைக் கடவுளாகிய முருகப் பெருமானின் இடம் பற்றியும் அறிவுத் தெளிவோ புரிதலோ இல்லாமல் பேசிக் கொண்டிருத்த பேராசிரியர் அருணன் இனி விவாதங்களுக்கு  வருவதற்கு முன்னால் இது குறித்துப் படித்து தெரிந்து கொண்டு வருவது நல்லது .

தமிழர்களின் மொழி,அதன் இலக்கியச் சிறப்பு ,வழிபாட்டு முறைகள் ,வாழ்வியல்  நெறிகள் சூழலியல் இயற்கையோடு இயைந்த அவர் தம் வாழ்வு என எல்லாப் பரிமாணங்களிலும் அவர்களின் பெருமைக்குரிய பண்பாட்டு அடையாளமாக ஒளிர்பவர் வேலன் என்ற முருகன் .'நீங்கள் மலைவாழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள் ?'என்று நாம் தமிழர் கட்சியினைப் பார்த்துக் கேள்வி எழுப்பும் அருணன் மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் என்று சங்க இலக்கியத்தில் போற்றப் படும் முருகன் தமிழர்களின் அடையாளம் என்பதை வசதியாக மறந்து விட்டுப் பேசுகிறார் .

"தெலுங்கரான பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்கள் இதோ "என்று சில நூல்களின் பெயர்கள் இணையத்தில் பட்டியலிடப் பட்டிருக்கின்றன .இதன் மூலம்  என்ன செய்தி சொல்ல முன்வருகிறார்கள் ? தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும்ஆதராகவோ ஏன் எதிராகவோ கூட தமிழிலேயே ஒரு வெள்ளைக்காரன் கூட கட்டுரை எழுத முடியும் .அதனாலேயே அவர் தமிழராகி விடமுடியுமா ?  இத்தாலி நாட்டு வீரமாமுனிவர் செய்த தமிழ்த் தொண்டை விடவா ஒருவர் அதிகம் செய்து விட முடியும்  ?அவர் இருந்த போதும் இறந்த பிறகும் அழைக்கப் படுவது இத்தாலியர் என்றுதானே ?

அப்படி என்னதான் தெலுங்கர் பேராசிரியர் அருணன் தமிழில் எழுதி விட்டார்
என்று பார்த்தால் 'தமிழரின் தத்துவ மரபு ' என்ற நூல் அதுவும் இரண்டு பாகங்கள் !  ஒவ்வொரு சமூகத்திலும் வெவ்வேறு காலக்கட்டங்களில் அந்தந்த சூழலுக்கேற்ப எழுதப் படும்   இலக்கியங்களில் மாக்ஸியத்தின் பொருள் முதல்வாதத்தை முன் வைத்து அக் குறிப்பிட்ட மக்களின் தத்தவ விசாரத்தையும்  ,மரபையும்  கண்டறிய முற்படுவது பார்வையற்றவர் யானையைத் தடவி அதனை விளக்க முனைவதைக் காட்டிலும் அபத்தமானது  . அதனால் தான்   மேட்டுக் குடியினரை மட்டுமே சென்றடைந்த ஓஷோ வின் தத்துவம் தமிழரின் வாழ்வில்  ஏற்படுத்திய தாக்கம் பற்றியெல்லாம் அருணன் எழுதியுள்ளார் .

தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்று தத்துவப் பேராசிரியராக விளங்கும் கத்தோலிக்கக்  குருவான பேராசிரியர் நிஷாந்த் இருதய தாசன் Nishant Irudayadason' ECOLOGICAL CONSCIOUSNESS IN THE MURUKAN CULT'என்ற தலைப்பில் எழுதியிருக்கும் ஆங்கிலக் கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கும் ஆழமான கருத்துக்கள் இங்கு நோக்கத்தக்கது .கீழை மேலை என எல்லா  தேசங்களிலும் எந்த ஒரு மதம் அல்லது கடவுள் கொள்கைக்கு மையமாகவும் மூலமாகவும் நமது  பூமியே இருக்கிறது என்றும் மதங்களின் சடங்குகள் ,வழிபாடுகள் அனைத்தும்  பிரபஞ்சத்தைப் பேணுவதற்கான நெறிகளாகவே வகுக்கப் பட்டுள்ளன என்றும் குறிப்பிடுகிறார் .அந்த நோக்கில் தமிழ்க் கடவுளாகிய முருக வழிபாடும் காலம் தோறும் அவரைப் பற்றி பரிணாமம் பெற்ற புராணங்களும்  இயற்கையோடு இயைந்த இறைச் சிந்தனைக்கு எப்படி விளக்கமாக  இருக்கின்றன என்பதனைச் சான்றாதாரங்களுடன் தெளிவு படுத்துகிறார் .முருகனது பிறப்பிலேயே பஞ்ச பூதங்களின் பங்கு இருப்பதனை தமது ஆய்வுக் கட்டுரையில் தகுந்த விளக்கங்களுடன் நிறுவியுள்ளார் .குறிஞ்சி நிலத்தின் தலைவனாகிய முருகன் ,தமிழ் மக்களின் தெய்வம் மட்டுமல்ல .மலை சார்ந்தும் காடு ,கடல் ,வயல்கள் சார்ந்தும் குறிஞ்சி ,முல்லை மருதம் நெய்தல் என நிலங்களில் தன்னை இணைத்து ,இயைந்து வாழ்ந்த தமிழரின் பழம் சிறப்பின் அடையாளம் !பண்பாட்டின் பெருமை மிகு குறியீடு  !

பின்னாளில் வைதீக நெறியின் கலப்பால் ஸ்கந்தனாக மாறிப் போன ஆதித் தமிழரின்  வேலன் பற்றிய செய்திகள் நிஷாந்த் இருதயதாசன் அவர்கள் கட்டுரையில் இடம் பெறவில்லையே என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அதைப் பற்றிய ஆய்வில் தாம்   ஆழமாக  ஈடுபட்டிருப்பதாகவும்  விரைவில் அதையும் ஒரு நூலாகக் கொண்டு வரவிருப்பதாகவும் தெரிவித்தார் ..பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பண்பாட்டுக் கலப்பு  தவிர்க்க முடியாது என்று தெரிவித்த அவர் வைதீக நெறியில் கலந்து வேறு ஒரு பரிமாணம் அடைந்திருக்கும் ஸ்கந்தனான முருக வழிபாடு ஏற்புடையது என்றாலும் ஆதி முருகனை மீட்டெடுப்பதும் நமது கடமை எனத் தெரிவித்தார் .அவர் அடுத்துக் கூறிய செய்தி மிக முக்கியமானது .அவ்வாறு மீட்டு எடுக்கும் முயற்சியில்தான் நாம் தமிழர் கட்சி ஈடு பட்டிருப்பதாகவும் அது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார் .பேராசிரியர் நிஷாந்த் இருதயதாசன் {Nishant Irudayadason} பெரும்பாலும் ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும்தான் கட்டுரைகள் எழுதுகிறார் என்றாலும் தம்மை ஆங்கிலேயன் என்றோ பிரெஞ்சுக்காரன் என்றோ சொல்லிக் கொள்வதில்லை  என்பது குறிப்பிடத்தக்கது .

இனி மேல் முருகன் பிராமணியக் கடவுள் என்று எகத்தாளமாக பேராசிரியர் அருணன் பேச முற்படுவதற்கு முன்னால் சங்க இலக்கியத்தில் முருகன் குறித்து  இடம் பெறும் வேலன் வெறியாட்டு போன்ற செய்திகளையெல்லாம் படித்து விட்டு  வருவது நல்லது .நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படை என்ற நூலில் தமிழ்க் கடவுள் முருகனின் ஆறு படை வீடுகளும் அவனது பெருமைகளும் விவரித்துக் கூறப் படுகின்றன .ஆனால் பிற்காலத்தில் வடமொழியில் உள்ள சிவசங்கரசங்கிதையின் ஒரு பகுதியான ஸ்கந்தனின் வரலாற்றைக் கூறும் கந்தபுராணம்  வடமொழி வைதீக நெறி கலந்து எழுதப் பட்டுள்ளது .இதனால் முருகன் தமிழ்க் கடவுள் இல்லை என்றாகி விடுவாரா ?

இடதுசாரிக் கொள்கைப் பிடிப்பும் அதே நேரத்தில் நல்ல இலக்கியத் தேர்ச்சியும் புலமையும் ஆழமான அறிவோடு பண்பட்ட உள்ளத்துடன் பழகுகின்ற  சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர்  இன்குலாப் பேராசிரியை சரசுவதி ராஜேந்திரன் போன்றவர்களுக்கு, தம்மையும் இடதுசாரி அறிவு ஜீவியாகக் காட்டிக் கொள்ளும் பேராசிரியர் அருணன் இழிவை உண்டு பண்ணுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும் .

பேராசிரியர் அருணனின் அடுத்த அபத்தமாக அவரது அர்த்தமற்ற பிராமணிய சாடல்  பற்றி அடுத்து பதிவு செய்கிறேன் இப்பவே கண்ணைக் கட்டுதே !